Wednesday, August 24, 2011

தெருவிளக்கு ...!




தெருவின் ஓரம்
ஒற்றையாய் நின்று கொண்டு
இரவில் இருளின் வெளியை 
நிரப்ப முயலும்
தெரு விளக்கின் வெளிச்சத்தில்
இரவின் இருள் 
முழுவதுமாய் மாய்ந்து விடுவதில்லை ..

தெருவிளக்கிலிருந்து சிதறிய
ஒளித் துகள்கள் யாவும்
இருளின் ஒவ்வொரு
புள்ளியின் மையத்திலும்
மோதி ஒரு சிறிய போர்
ஒன்றை நடத்துகிறது ..

போரின் முடிவில்
ஒன்றையொன்று
முழுவதுமாக
வெற்றிக்கொள்வதில்லை..

முழு வெற்றியும் இல்லாத
தோல்வியும் இல்லாத
முடிவில்லா
இப்போர்
ஒவ்வொரு இரவு முழுவதும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
எல்லாப்  போரைப்போல்,
அமைதியைக் கலைத்துக் கொண்டு ..

இங்கே அமைதியை
கலைப்பது
இருளிடமிருந்து ..

மாற்றம் ..!




மாற வேண்டும் என எண்ணுகையில்
ஏதோ ஒன்று 
எண்ணத்தை மாற்றி விடுகிறது
மாறவிடாமல் ..

முயன்று
நான் மாறியப் பொழுதுகளில்
மாறாமல் இருக்கும்
சூழ்நிலைகளையும்
நினைவுகளையும்
மாற்றுவதற்காக மட்டும்
மாறாமல் முயன்றுக்கொண்டிருக்கிறேன்..