Saturday, December 10, 2011

கடவுளும் மனிதனும் ...!





கடவுள் மனிதனைப் படைத்தார் ,
மனிதனும் பல கடவுள்களைப் படைத்தான் ..

கடவுள் மனிதம் இல்லா மனங்களில் பேயைக்  கண்டார் ,
மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயைக்  கண்டான் ..  

கடவுள் மனிதன் மனதை கல்லாய்க் கண்டார் ,
மனிதன் கடவுளை கல்லில் கண்டான் ..

கடவுள் இதிகாசங்களில் மனிதன் ஆனார் ,
மனிதன் சில தருணங்களில் கடவுள் ஆனான் ..
 
கடவுளும் பூமியில் மனிதனை தேடுகிறார் ,
மனிதனும் கடவுளைத் தேடி அலைகிறான் ..

இறுதியில் ,
கடவுளும் பல நேரம் கடவுளாக இல்லை  
மனிதனும் பல நேரம் மனிதனாக இல்லை ..

Sunday, December 4, 2011

பட்டம்..!





சிறகின்றிப் பறக்கும்
உயிரின்றித் துடிக்கும்
காற்றைச் சுவாசிக்கும்
அதைச் சுவாசிக்கும் வரை
நிலைக்கும் ..

எப்போதும் உயர வேண்டும் என
நினைக்கும் ..

தன் நம்பிக்கை
நூல் கொண்டு
திசை நோக்கி
குறிக்கோளோடு
பறக்கும் ..

மது அருந்தாமலேயே 
தள்ளாடியபடியே
தனியே நிற்கும் ..


மனிதன் கையில்
இருப்பதால் என்னவோ
போட்டி வந்துவிட்டால்
அடுத்தவனை அறுக்கும் ..

பறவையும் போட்டி போடும் 
உன்னைப் பார்த்து ..

ஒற்றைக்காலில்
காற்றின் மெல்லிய
இசைக்கு நாட்டியமாடும்..

உண்மையில்
நான் படிக்காமல்
வாங்கிய பட்டம் நீ ..


Saturday, December 3, 2011

உறவுகள் ..!



காதுகளோடும்
வாயோடும்
உறவாடும்
கைபேசி ..

கண்களோடு
உறவாடும்
தொலைக்காட்சி ..

இப்படி மாறிப்போனதால்
மனதும் மறந்து போனது
மனிதரோடு உறவாட ...!

நான் யார் ?




என்னிடம்
எதுகையில்லை ,
மோனையில்லை,
சந்தமில்லை ,
மரபு இலக்கணப்படி
கவிதைக்கான எந்த
பந்தமும் இல்லை ..!
அப்படி என்றால்
நான் யார் ?

என்னிடம்
ஒரு கதைக்கான
தொடக்கமுமில்லை ,
அதை விளக்கும் சம்பவமுமில்லை ..
அதற்கான முடிவுமில்லை ,
இவை அனைத்தும் சொல்லும்
கருவுமில்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

என்னில்
ஒரு கட்டுரைக்கான
ஆரம்பமும் இல்லை
முன்னம் வந்த வரிக்கும்
பின்னம் இருக்கும் வரிக்கும்
எந்த ஒரு தொடர்பும் இல்லை ..
இவை அனைத்தும் விளக்க
எந்த ஒரு கருத்துமில்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

என்னைப் படித்தால்
புரியவில்லை
புரியாமலுமில்லை..
இவையாவும் படித்தால்
அர்த்தம் புரியாமலிருக்க
கிறுக்கலும் இல்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

Sunday, November 27, 2011

எனக்கொரு ஆசை ..!






எனக்கொரு ஆசை
மீண்டும்
என் முதல் உலகிற்குச் செல்ல ...

நீர் சூழ்ந்த உலகம் அது ,
காற்று என்பதே கிடையாது ,
இருள் நிறைந்த உலகம் அது,
பயம் என்பதே கிடையாது ..

அங்கே இருட்டில் இருந்தும்
எப்போதும் வாழ்க்கை
வெளிச்சமாய் இருந்தது..

கிட்டத்தட்ட
அஃது ஒரு
தனிக்குடித்தனம்
ஆனாலும் தனியாக இல்லை ..

உணவு இடம் பாசம்
என அனைத்தும் கிடைக்கும்
விருந்தோம்பல் அங்கே ..

வேலை என்பதே கிடையாது ,
ஆனாலும் ஒரே வேலை தூக்கம் ..
சில நேர விழிப்பில் ,
தூக்கத்திற்கு ஓய்வு ..

மனதில் சிறிதும்
கோபம் இல்லை ,
சோகம் இல்லை ,
துன்பம் இல்லை ,
காதல் இல்லை ,
காமம் இல்லை ..

இரவின் நிலவு போல ,
அங்குத் துணையாக யாரும் இல்லை ,
தனிமையைத் தவிர ..

ஆனாலும் அங்கேயும் ,
நிலவைத் தாங்கும் வானம் போல
எனையும் தாங்க ,
எனக்காகச் சுவாசிக்க ,
எனக்காக உண்ண ,
என்னையே எப்போதும் நினைக்க
எனக்காகவே இருக்க
ஒரு ஜீவன் ..
என் தாய் ..

ஆம் !எனக்கொரு ஆசை
மீண்டும் என் முதல் உலகிற்குச் செல்ல ..

Wednesday, November 23, 2011

என்னைத் தேடும் நினைவுகளுக்கு ..!





என்னைத் தேடும் நினைவுகளிடம்
நான் என்ன சொல்ல வேண்டும் ?

உண்மைகள் என்னைப் பொய்த்ததால் 
தொலைந்து போனேன் என்றா ?
நியாயங்கள் தன் தர்மங்களை
இழந்ததால் என்றா ?

தூரங்களில் உள்ள நியாயங்கள்
சில நேரம் கோபம் தரும் !
காலம் தரும் பதிலில் மட்டுமே
அந்த நியாயங்கள் விளக்கம் பெறும் ..!

உனது தேடல் ,
மாலை நேரக் காற்று வந்து சில்லென
என்னை மோதிச் செல்கையில்
அந்த  கண்ணீரில்  தெரிகிறது ..

தினசரி உச்சி வெயில் வந்து
என்னைச் சுட்டுச் செல்கையில்
அந்தக் கோபத்தில்  தெரிகிறது ..

அமாவாசை அன்று
நிலவு தேடும்
மேகங்களிடம் தெரிகிறது ..

பூமிக்கடியில்
நீரை தேடி செல்லும்
மரங்களின் வேர்களில் தெரிகிறது ..

கவிதைக்கு
வார்த்தைகள் தேடும்
எண்ணங்களில் தெரிகிறது ..

தாய் தேடி அழும்
சேயிடம் தெரிகிறது ..

காற்றில் நோக்கின்றித் திசையின்றி
எதையோ தேடி அலையும்
சிறகுகளிடமும்
சருகளிடமும் தெரிகிறது ..

இவை அனைத்திலும்
உன் தேடல் தெரிந்தும்
நான் எதுவும் செய்வதற்கில்லை ..

என் முகம் இழந்த உடலோடு
முகமூடி அணிந்து
பேச முடிவதில்லை ..

ஊமையின் வாய் அசைப்பில்
பேச்சு வருவதில்லை
இந்தத் தேடலின்
முடிவில்
நான் சிக்குவதில்லை ..!


Saturday, November 19, 2011

மேகம் ..!




வானமெனும் சுவரில்
வான்கோ,
டா வின்சி
வரைந்த ஓவியமா நீ ?

நிலவவள் நாணி
தன் முகம் புதைத்துக் கொள்ளும்
போர்வையா நீ?

சூரியன் வெயில் காலத்தில்
தன் முகம் துடைக்கும்
கைக்குட்டையா   நீ ?

சூரிய ஒளியை
சலித்தெடுக்கும்
சல்லடையா நீ?

காற்று வளி மண்டலத்தில்
விடப்படும்
கப்பலா நீ ?

இடி போட்ட
அரட்டலுக்குப் பயந்து
கண்ணீர் சிந்துவாயா நீ ?

வான்வெளியில்
போடப்பட்ட
அழகிய தரைவிரிப்பா நீ ?

கார்கால நேரத்தில்
கருப்பு மை அப்பிக் கொள்வாயா நீ ?

வானமெனும் கட்டிலில்
போடப்பட்ட
அழகிய தரைவிரிப்பா நீ ?

வானமகள் காலையிலும்
மாலையிலும்
தன் வீட்டு வாசலில்
இடும் கோலமா நீ?

எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்
இருக்கும் இடம் தெரியாமல்
மறைந்து போவாய்
என மனிதன் உணர
கடவுள் எழுதி வைத்த தத்துவமா நீ ?

Wednesday, November 16, 2011

என் மனதோடு ஒரு சிறு பயணம் ...!




என் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றார்போல்
என் பாதை ஓடினாலும் ,
என் மனம் மட்டும்
சில தருணங்களில்
எங்கோ தொலைந்து விடுகிறது ..

அப்படிச் சில தருணங்களின்
காட்சிகளில்
நான் இருப்பதால் ,
அந்தக் காட்சியில்
தொலைந்து போகிறேன் ..

என் மனம்
தொலைந்து போகும்
வேளையில் ,
தொலைந்த இடத்திலிருந்து
தெரிந்த இடத்திற்கு
தெரியாத திசை நோக்கி
என் மனதோடு ஒரு சிறு பயணம் ..

நான் அந்தப் பயணத்தில்
முன்னோக்கி நடக்க
நான் வந்த பாதை
என்னை நோக்கி
பின்னோக்கி நடக்கிறது ..
காலமோ
என்னை நோக்கி
பின்னோக்கி
வேகமாய் ஓடுகிறது ..
சில நேரம்
என்னையும் தாண்டி ஓடுகிறது ..

அஃது இட்டுச் சென்ற இடம்
என் மனதின் கூடம் ..
எழுவதும்
கரை தொட முனைவதும்..
தோற்றாலும் பின்
கடல் வந்து எழும் அலையாக உள்ளது
என் மனம் ..

அந்தப் பயணப்படும்
வழியெங்கும்
தன்னுள் இருக்கும் நினைவுகளை
பதியம் போடுகிறது மனது ..

அந்தப் பதியம் விளைந்தால்
மனதிலே பூக்கள் பூக்கும் ..
அந்தப் பூக்களின் வாசமே
தொலைந்து போன பாதையை
மீட்டுத் தரும் ..

பதியம் கருகினால்
மனதில் ரணமான
காயங்களை மீண்டும் குத்திக்காட்டி,
அந்த வலியே
தொலைந்து போன பாதையை
மீட்டுத் தரும் ..

இப்படியாக
எப்படியோ
அந்தப் பயணத்திலிருந்து
மீண்டும்
மீண்டு வந்தேன் ..

இப்படி
முன்பின் தெரியாத நபரை
பார்த்துச் சிரிக்கும் சிறு குழந்தையாகவே
முன் நடந்த சம்பவம் எண்ணி
சம்பந்தமின்றி
சிலநேரம் சிரிக்கிறேன்,
மனதோடு பயணமாகிறேன் ..

அதில் ஒளிந்திருக்கும்
அழகையும்
ரணத்தையும்
ரசிக்கிறேன் ...

இப்போது இல்லை
எப்போது நினைத்தாலும்
வியப்பாக உள்ளது
இந்தப் பயணம் ..

Sunday, November 13, 2011

வாசல் ...!






வீட்டின்
முற்புறத்தில் நின்று
தனியாக ஆடுகிறது
முன்னும் பின்னும்
வாசல் கதவு ..

சில நேரம்
பிஞ்சுகளின்
துணையோடும் ..

முன்னும்
பின்னும் ஆடுகையில்
அவையிடும் சத்தங்களை
முதுமையின்
கதறல்களாகக் கொள்ளவா ?

தனிமையின் துயரம் சொல்லும்
அழுகையாகக் கொள்ளவா ?

பிஞ்சுகளின் கை பிடித்து
விளையாடிய மகிழ்ச்சி சொல்லும்
சிரிப்பாகக் கொள்ளவா ?

Friday, November 11, 2011

நொடிகள் ...!






நேரங்கள் உடைந்து
உதிர்ந்து சிதறி,
காலத்தின்
கடைசிப் படிக்கட்டில்
தொங்கிக்கொண்டு இருக்கும் நொடிகள்,
பல நேரம்
நொடிகளாகக் கடப்பதில்லை ,
யுகங்களாகக் கனக்கிறது ..

காலமெனும் அணைக்கட்டில்
வாழ்கையெனும் மதகுகளின்
திறவுகளுக்கு ஏற்பவே
நொடிகள் யாவும்
ஒவ்வொரு நொடியும்
பயணமாகிறது ..

வாழ்க்கையின் முற்புறத்தில் ,
காலம் வைக்கும்
ஒவ்வொரு புள்ளியிலும்
கோலமிடுகிறது நொடிகள் ..

காலத்தின் கணக்குகளில் சிக்காமல் 
நொடியில் பல காலம்
கடந்து செல்லும் 
நினைவுகளின் கணக்குகளை
காலம் இன்னும் தீர்த்துக் கொண்டிருக்கிறது ..



Thursday, November 10, 2011

மனிதன் உயர்திணையா ? அஃறிணை?






மனிதன் உயர்திணையா ? அஃறிணையா?
-ஒரு சிறப்புப் பட்டிமன்றம் ..


நடுவர் -கடவுள்

பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,குரங்கு .

கடவுள் :
என் இனிய உயிரினங்களே ..
நான் படைத்த உயிரினங்களில்
மனிதன் மட்டும் உயர்திணை
என்ற உயர்ந்த விதியை கொடுத்தேன் ..
ஆனால் இன்று மனிதனே
அதைக் கெடுத்தான்..
விவாத மேடையில் மனிதன் உயர்திணையா ? அஃறிணையா? என்ற கேள்வியை நிறுத்தி விட்டான் ..
முதலில் பேச வருபவர் மனிதன் ..

மனிதன் :
மனிதன் ஏன் உயர்திணை தெரியுமா ?
ஏனென்றால் அவன் மனிதன் .
புதிதாகப் படைப்பவன் ..
பலவற்றைக் கண்டுபிடிப்பவன் ..
சிந்திப்பவன் ..
சிரிப்பவன் ..
உயிரியல் குடும்பத்தில் சிறப்பவன்..
இப்படிப் பல சிறப்புடன் இருப்பவன் ..
அதனால் அவன் உயர்திணை ..

கடவுள் :
விளக்கம் அருமை . அடுத்து குரங்கு .

குரங்கு :
பூக்களைக் கூடக் கொலை செய்து
அதில் வாசம் தேடும் கூட்டம் நீங்கள் ..
சொன்னபடிக் கேளாமல்
ஒழுக்கத்தோடு வாழாமல் ,
மனம் மாறி மனம் மாறும் ,
குணம் மாறி குணம் மாறும்
கட்சி விட்டுக் கட்சி தாவும்
என்னைப் போல் குரங்கு நீங்கள் ..

கடவுள் :
ஆஹா !பிரமாதம் ..அடுத்துப் பாம்பு ..

பாம்பு :
மனம் இழந்து
குணம் இழந்து
பணம் தேடும்
பிணம் நீங்கள் ..
தன் இனம் அழித்து
அதில் வெற்றியை ருசித்து
உணவுக்காக
எங்கள் இனத்தையே உண்ணும்
என்னைப் போல் பாம்பு நீங்கள் ..

கடவுள் : மேல் சொன்னது உண்மை தான் ..அடுத்து யானை ..

யானை :
சுயநலப் பேய் பிடித்தவனுக்கு
அடிக்கடி மதமும் பிடித்துப் போகும் ..
மதம் கொண்டால்
மனதை புதைப்பான்
பிறரையும் அழிப்பான்
என்னைப் போல் ..

கடவுள் :இது நிதர்சன உண்மை .. அடுத்து நாய் ..

நாய்:
நான் கூட நன்றியோடு இருக்க
மனிதன் செய்நன்றிக் கொன்றான்
பணத்திற்காகப் பன்றியை போல்
சாக்கடையில் பிரண்டான்..
பருவத்தில் ,
பிற பலரின் பின்னல்
என்னைப் போல்
நாயாக அலைகிறான் ..!

கடவுள் : ஹா ஹா ..அடுத்துப் பூனை

பூனை :
மணமான புதிதில்
தன் துணையை 
சுத்தி சுத்தி வரும்போது
பால் கண்ட பூனை யாகிறான் ..

கடவுள் : உண்மை தான் ..அடுத்து பறவை ..

பறவை:
பெற்று வளர்த்த
தாய் தந்தையை மறக்கும் போது ..
சிறகு முளைத்து
என்னைப் போல்
கூட்டை விட்டு பறக்கும் போது
பறவையாகிறான்..
பெற்ற குழந்தையை ,
குப்பைதொட்டியில் வீசும்போது ,
தன் முட்டை
அடுத்தவர் கூட்டில் இடும்
குயிலாகிறான் ..

கடவுள் : உண்மை தான் ..அடுத்து முதலை ..

முதலை:
பணத்திற்காக
பிணத்திடம் கூடத் திருடி
பிணம் தின்னும் ஓநாயயே ..
தன் காரியம் சாதிக்க
பிறரிடம் என்னைப் போல்
முதலைக் கண்ணீர் வடிக்கிறாயே ..

கடவுள் :
அனைத்து விளக்கமும் உண்மை ,
மனிதனின் விளக்கம் தவிர ..
மனிதன் பல மிருகங்களின் கலவை ..
அதனால்
இலக்கணத்தில் ஒரு மாற்றம் தேவை ,
மனிதன்
உயர்திணை இல்லை
அஃறிணை..

Tuesday, November 8, 2011

எங்களைத் தெரியுமா ?




எங்களைத் தெரியுமா ?
கணிப்பொறியோடு விளையாடி
அதனோடு உறவாடி
வேலை செய்யும் வித்தைக்காரர்கள் நாங்கள் ..

பொய் பேசும் மனிதன் பார்த்து 
வியாபாரம் செய்யாமல் ,
செய்ததைச் சொல்லும் கிளிப்பிள்ளையாம் 
கணினி பார்த்து
வியாபாரம் செய்பவர்கள் நாங்கள்..

கைநிறைய சம்பளம் வாங்கும்
நவயுக Pharaoh இன் அடிமைகள் நாங்கள் ...

உடல் உழைப்பை இழந்ததால் ,
மன உளைச்சலை
இலவசமாகப் பெற்றவர்கள் நாங்கள் ..

இப்படி வேலை செய்து
கண்களுக்கும்
எங்கள் கண்ணடிக்கும்
திருமணம் செய்து வைப்பவர்கள் நாங்கள் ...

A/C அறையில்
எப்போதும் சூடாக 
வேலை செய்பவர்கள் நாங்கள் ..

குடும்பங்களை மறந்து
வேலை செய்யும்
வண்ண உடை அணிந்த
கணினியில் உலகம் தேடும்
புதிய வகைச் சந்நியாசி நாங்கள்..

ஒட்டு போடும் நாளில் கூட
எங்கிருந்தோ எங்கள் சம்பள நோட்டு போடும்
அந்நிய துரைகளுக்கு
விசுவாசமாக இருந்து கொண்டு ,
நாட்டில் நடக்கும் ஊழல் பற்றிப் பேசும்
தேசியவாதிகள் நாங்கள்..

வேலையில்
மூளையில் பளு சுமக்கும்
வேலைக்காரர்கள் நாங்கள்..

வேடந்தாங்கல் பறவையாக
அவ்வப்போது குடும்பக் கூட்டுக்குள்
வந்து செல்லுபவர்கள் நாங்கள்..

இன்னுமா தெரியவில்லை ?
மனதில் அழுத்தம் கூட்டும்
வேலைப்பளுவில் இருக்கும்
மென்பொருள் காரர்கள் நாங்கள்..

Sunday, November 6, 2011

மழை ...!




மேகம்
மண்ணில்
இட்ட முத்தங்களா ?

மேகங்களின்
மோகங்களின்
பிள்ளையா?

பூங்காற்று
போட்ட
மாறுவேடமா?

வானம்
பூமிக்கு போடும்
அட்சதையா ?
இல்லை
மானுடம்
கண்டு
வானம் காரி
உமிழும் எச்சிலா ?

பூமிக்கு
மேகம் தரும்
பரிசா ?

மேகம் பூமியில்
உயிர்கள் கருத்தரிக்க
தந்த விந்தோ ?

எங்கள் தாகத்திற்கு
வானம்
மேகத்திடம் பட்ட
கடனா ?

மேகங்கள்
தற்கொலை செய்து
பூமியின் மீது
விழுந்தனவா ?
இல்லை
பூமியின்
அழகைக் கண்டு
மேகம்
மயங்கி விழுந்தனவா ?

பருவக் காற்று
பூமிக்குப் பாடும்
வசந்த தாலாட்டா?

கருமை இட்ட
மேக விழிகளில் இருந்து
வழியும் கண்ணீரா ?

இடியின் அதட்டலுக்கு
பயந்து மேகம்
சிந்திய கண்ணீரா?

எதுவோ ,
கிழிந்துவிட்டது எனது குடை
இனி நான் அழகாய் ரசிக்கலாம்
மழை ..!

Saturday, November 5, 2011

எனக்கு மேல் ஒருவன் ..!



கொலை செய்துவிட்டு
உறங்கச் சென்றேன்,
இரவில் கொசுக்கள்..!

Friday, November 4, 2011

அனாதை எழுத்துக்கள் ….!




பல எழுத்துக்கள் இங்கே
படிக்க யாருமற்று கிடக்கிறது ,
பிறந்த குழந்தையை,
தூக்கி சீராட்ட யாருமின்றி
அனாதையாக இருப்பது போல் ..

காக்கை கூட்டில் முட்டை இட்டு
செல்லும் குயில்களாக  ,
எழுத்தாளர்கள் எழுத்துக்களை 
வலைகூட்டிலும்
புத்தககூட்டிலும்
அனாதையாய்
விட்டுவிட்டு போகிறார்கள்  ..

தெருவில் விடப்பட்ட அழாத  குழந்தையை
கண்டும் காணாமல் போவது போல் ,
பல நேரம்
அனாதை எழுத்துக்களை யாரும் கவனிப்பதில்லை ..

அனாதை எழுத்துகளுக்கு
ஆதரவு அளித்து
வாழ்வளிப்பதும்
நெஞ்சில் தஞ்சம் அளிப்பதும்
வாசகர்களே ...

அனாதை எழுத்துக்களின்
வாழ்வும் ,
அனாதை குழந்தைகளின்
வாழ்வும் ஒன்றாகவே
இருக்கிறது ..
தன்னை ஏற்றுக் கொண்ட
நெஞ்சங்கள் அளவை பொறுத்தே
அவற்றின் வாழ்வும்
பிரகாசிக்கிறது ..

Monday, October 31, 2011

நிகழ்வுகள் ..!






யாரும் தொடவில்லை
யாரும் பறிக்கவில்லை
ஆயினும்
இலைகள் உதிரும் ...



Sunday, October 30, 2011

சில நிகழ்வுகளின் தலைகீழ் விளைவுகளில் சில

சில நிகழ்வுகளின்
தலைகீழ் விளைவுகள் ,
அந்த நிகழ்வுகளின் தன்மையாக
நாம் நினைத்ததை
முன்னம் இருந்த நிலையிலிருந்து
தலைகீழாக மாற்றிவிடுகிறது..





சரியாக நாம் செய்வது
தவறாகப் போகும் வரை தெரியாது ,
நாம் செய்வது
சரியல்ல தவறு என்று ...

வீசும் காற்று
நம் மீது வந்து மோதும் வரை தெரியாது
வந்தது
பூங்காற்று அல்ல புயல் என்று ..

சொல்வதைச் செய்வதைச் சொல்லி ,
செய்யாமல் போகும் வரை தெரியாது ,
சொன்னது செய்யப்போகும் செயலல்ல சொல் என்று ...

சொன்னதை மட்டும் செய்தால்
சூழ்நிலையின் மாற்றம் மறந்தோமெனத் தெரியாது
செயலின் பிள்ளை சூழ்நிலை பிறக்கும் வரை ..

கண்ணீர் சிந்தும் சில நேரம்
சிரிப்பு வந்து முட்டும் வரை
தெரியாது
கண்ணீரும் இனிக்கும் என்று ..

மனதில் ஒட்டிய மனிதநேயம் ..!





என் வீட்டின்
மதில் சுவரில் ஒட்டிய
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை கிழித்தேன்..
அது ஓர் உயிரின் இறப்பு செய்தி..
சுவரில் ஒட்டிய அளவு கூட
என மனதில் ஒட்ட மறுக்கிறது ...

Wednesday, October 26, 2011

காற்றுக்கும் ஒரு பெண்மையுண்டு ..!




காற்றுக்கும் ஒரு பெண்மையுண்டு,
ஒவ்வொரு பெண்ணிடமும் காற்றின் தன்மையுண்டு ..

பெண்மை ..
நீக்கமற நிறைந்த தெய்வத்தின் வடிவம் என்றால் ,
நீக்கமற நிறைந்த காற்றே ,
நீயும் பெண்தான் ..

பெண்ணே ,
சிரித்துப் பேசி வந்தாய் ..
காற்றே
தென்றலாய் வீசி வந்தாய் ..

பெண்ணே ..
நீ படி தாண்டினால் வீடு தாங்காது ..
காற்றே ..
நீ புயலாய் மாறினால் நாடு தாங்காது ..

பெண்ணே ..
நீ மாலையிட்ட மணாளன் நின்றிருப்பான் ,
நீ சொன்னபடி எல்லாம் ஆடியிருப்பான் ..
காற்றே ,
நீ மாலையிட்ட மரமும் நின்றிருக்கும் ,
நீ சொன்னபடி எல்லாம் ஆடியிருக்கும் ..

பெண்ணே ..
ஓர் உயிரின் பிறப்பு பெண்ணிலிருந்து ..
காற்றே ..
ஒரு பூவின் பிறப்பு உன்னிலிருந்து ..

காற்றே ..
நிலவாவது அவள் முகம் காட்டினால் ..
நீ மட்டும் ஏன் வானத்தின் பின் ஒளிந்துகொண்டு ,
உன் இருப்பை மட்டும் உணரவைக்கிறாய் ?

நீ நிலவை விட அவ்வளவு அழகா ?
உன் முகத்தை மட்டும் காட்டினாலே
மானுடம் காதலில் சாகுமென மறைந்திருக்கிறாயோ??




 

Sunday, October 23, 2011

கனவு தேவதை ..!




அன்றொரு நாள் இரவில் ,
தூக்கம் இழந்தேன் .
தனியே எழுந்தேன் .
மேலே நடந்தேன் .
வானில் பார்த்தேன் .
தரையில் அமர்ந்தேன் .

மேலே நட்சத்திரக் கூட்டம் ஜொலித்தது .
என் மனதை அது மிகவும் கவர்ந்தது .
கூட்டத்தில் ஒன்று மிகவும் பிரகாசித்தது .

பார்ப்பதற்கு என் அருகில் வருவது போல் இருந்தது .
பார்க்கப் பார்க்க என்
பார்வையை நெருங்கியது ..
கண்சிமிட்டிப் பார்க்கையில்
என் அருகில் வருவது போல் இருந்தது .

தேவதை ..!
தேவதை..!
தேகமெல்லாம் தங்கமாய்
என் அருகில் ஒரு தேவதை ;

காட்சிகள் கண்களுக்கு மெய்ப்பட வில்லை .
மனமும் ஏனோ பயப்படவில்லை .
சிறிது நேரம் உறைந்து போனேன் ,
அவள் அழகை ரசிக்கையில் .

என் கருமணிகளும்
என் கண்களுக்குள்
சிறு குழந்தையெனத் துள்ளிக் குதித்து விளையாடுகிறது
அவள் அழகை ரசிக்கையில் ..

கரும் பாறையைத் தாண்டி விழும் அருவியாய் ,
அவள் கூந்தலும் அவள் சூடிய பூவும்.
மஞ்சள் நிலவாய் அவள் முகம் .
அதில் மயிலிறகாய் அவள் புருவம் .
அதன் கீழே பாலில் மிதக்கும் கருந்திராட்சைப் போல்
அவள் கண்கள் ..
பூவிதழ்களிலும் மெல்லிய ,
ஆண்களின் ஆசைகளைத் தூண்டும் காம ரேகை ஓடும்
செவ்விதழ் ..
மூங்கில் போன்ற வளைந்த அவள் தேகம் .
மூளை கிறங்கடிக்கும் ,
அழகிய வாழைத்தண்டு போன்ற கால்கள் ..
தாமரைப் போன்ற சிவந்த அவள் பாதம் ..

மெய் மறந்த வேளையில்
கல்யாணி ராகம் கேட்டேன்
ஆம் தேவதை சிரித்தாள்..

நிரம்பி இருக்கும் அணையைத் தாண்டி
வர முடியாத நதி நீரைப் போல் ,
அவளைக் கண்டதும்
தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தைகள்
வெளிவரவில்லை ..

யாழினும் இனிய இசை
அன்று தான் நான் கேட்டேன்
ஆம். தேவதை பேசினாள் ..

"என்ன பார்க்கிறாய் ?",
இது தேவதை பேசிய முதல் வார்த்தை ..

"ஒன்றுமில்லை.." என்றேன் .
பின் மௌனத்தைப் புன்னகைத்தேன் ..

திடீரென ,
"என்னை முத்தமிடு " என்றாள்.

முக்கனியும் வந்து என்னைத் தின்றுவிடு என்பது போல் இருந்தது
அவள் சொன்ன அந்த வார்த்தை ..
ஆனால் ,
மனதில் ஒரு பயம் .
உணர்வில் ஒரு தயக்கம் .

பின் ,
பயத்தைக் கலைந்தேன்.
தயக்கம் இழந்தேன் .
அவள் அருகில் சென்றேன் .

அவள் முகத்தை என் கையோடு எடுத்தேன் .
நிலவை நான் கையில் தொட்டேன்.
ஆம் , நிலவை நான் கையில் தொட்டேன் .

பின் அவள் முகத்தோடு என் முகத்தை இணைத்தேன் .
"ஐயோ !",என ஒரு சத்தம் .
"டேய் எருமை மாடு ", அதைத் தொடர்ந்து .
என் தமையனின் குரல் அது .

அப்போது உணர்ந்தேன் ,
இதுவரை நான் கண்டது கனவு ..

Friday, October 21, 2011

கண்ணீரின் எழுத்துக்கள் ..!





சில எழுத்துக்கள்
படித்தாலே புரிந்துவிடும்
அவை கண்ணீருக்கு
சொந்தமென ..

மனித உணர்ச்சியால்
உண்டான கிளர்ச்சியால்
உண்டான கண்ணீர் பிரசவிக்கும் 
எழுத்துக்கள் யாவும் உணர்ச்சியின் பாரம் தாங்க முடியாமல்   
சோகத்தின் நிழலில் ஓய்வெடுக்கிறது  ..

அந்த எழுத்துக்களை
படிக்கும் ஒவ்வொரு நொடியும் ,
எழுத்துக்களுக்கு
சொந்தமான கண்ணீரின் ஈரம்
நெஞ்சில் பிசுபிசுக்கும் ..

Wednesday, October 19, 2011

தவறான கவிதை ..!




ஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் ,
ஒரு நாள் தவறாக ..
எதைப்பற்றிச் சரியாக
தவறாக எழுத முடியும் என
யோசித்தேன் ...
பின்பு தெரிந்தது
நான் தவறாக யோசித்தது
சரியானது என ...
இப்போது சொல்லுங்கள்
இதுதானே மிகச்சிறந்த
தவறான கவிதை ...

பூமியை வாழவிடு ....!



மானுடமே,
நீ மறந்து போகிறாய் ..!
தாயின்
கருவறையில் இருந்து கொண்டே
நீ கருவறையைச் சிதைக்கிறாய் ..

கருவே
கருவறையை
சிதைக்கும் கொடுமை இங்கே நடக்கிறது ..
என்றைக்கும்
பிள்ளை மனம் கல்லாகக் கிடக்கிறது ..

தலைசுற்றிக்கிடக்கும்
பூமியின்
தலையெடுக்கப் பார்க்கிறாய் ..

பூமியை அட்டையாய்
உறிஞ்சுகிறாய் ,
நீருக்கும்
கச்சாவுக்கும் ..

புகை பிடிக்கும்
தொழிற்சாலைகள் ,
பூமிக்குப் புற்றுநோயாம்
ஓசானில் ஓட்டை ..

கடவுளை அளக்க
அணுவைப் பிளந்தான்
அணுகுண்டின் பேரழிவு ..

நதிநீர் கொண்டு
வளர்த்தப் பயிர் மறைந்து
அதில் மணல் கொண்டு
விதைக்கிறாய் கட்டிடம் ..

உன்சுயநலத் திடலில் ,
பூமிப்பந்தை
பந்தாக
பந்தாடுகிறாய் ..

வான் மழையும்
அமிலத்துளியாய்
மாறிப்போனது ...

மரத்தை வெட்டி விட்டு
குளிர் காற்றுப் பெட்டியில் வாங்கி
வீட்டிற்குள் மாட்டப்படுகிறது ..
வளிமண்டலக் காற்றில்
நஞ்சு ஏற்றப்படுகிறது ..

பூமியை சூடாக்கி
துருவங்களின்
உருவங்களை மாற்றி
வாட்டி எடுக்கப்படுகிறது ..

உயிரியல் கூட்டுக்குடும்பத்தில் ,
தனியாகச் சுயநலம் ஆட்டம் போடும்
மானுடமே ,
பூமி உன் குடும்பச் சொத்தல்ல ..
அது பொதுச் சொத்து ..

உன் தலைமுறைக்கு மட்டும் அல்ல ....
இனி வாழும் தலைமுறைக்கும் ..

நீ வாழு ,
பூமியை வாழவிடு ..

மானுடமே,
நீ மறந்து போகிறாய் ,
தாயின் கருவறையில் இருந்து கொண்டே
கருவறையைச் சிதைக்கிறாய் .. !

Monday, October 17, 2011

நிலைத்துக்கொண்டிருக்கும் மாறுதல்.!





மாற்றத்தின் மாறுதலை
மாற்றி வைத்து
அதை நிலைக்க வைக்க
நினைக்கிறேன் ..

அது தன் நிலையில்
நிலைத்துக்கொண்டு இருக்கிறது ,
ஆனால்
எப்போதும் மாறுகிறது ..

எப்போதும் மாறுகிறது ,
ஆனால்
தன் நிலையில் நிலைக்கிறது ..

Saturday, October 15, 2011

அழுகைக்குப் பிறந்த சிரிப்பு…!





மகனே,
நீ பிறக்கையிலே
உனது அழுகைக்கு
பிறக்கிறது..
எனது சிரிப்பு…!





கையேந்தும் தர்மங்கள் ..!




மின்சார இரயிலில்
இரயில் சத்தத்தையும் தாண்டி
வறுமையின் சத்தம் வருகிறது,
சில்லறையோசையில் கனத்தக் குரலில் பாடும்
குருட்டுப் பிச்சைக்காரனிடம் இருந்து 
காதுகளில் பொத்தப்பட்ட
பாட்டுப் பொட்டியின் சத்தத்திடம்,
வறுமையின் சத்தம் தோற்றுவிடுகிறது ..

அங்கு நம் கண்களும் குருடாகிறது ,
மனது சிறைப்பட்டு
இருளில் அடைப்படுகிறது ,
இங்குத் தர்மம்
இருட்டில் விடப்படுகிறது ..

நடைபாதையில் கைபேசியில் 
பேசிக்கொண்டு போகையில் 
ஒரு கைபிடித்து
யாசகம் கேட்கிறாள் சிறுமி ,
ஒருவேளை உணவாகும் என்ற
நம்பிக்கையில் ..

அந்தப் பிஞ்சு கைகள் 
தட்டி விடப்படுகிறது ,
இங்குத் தர்மம்
கைவிடப்படுகிறது ..

சுரங்கப்பாதையில் ,
பிச்சைக்காரன் மடியில்
உறங்குகிறது குழந்தை ..
பால்குடி மறவா பிஞ்சுக்கு
போதை நெடியும் ஏற்றப்படுகிறது ..

உறக்கத்தில் இருக்கும்
குழந்தை என்ன கனாக் காண்கிறது?
உறக்கத்தில் இருக்கும்
தன் வாழ்வு விழித்துக்கொள்கிறது என்றா ?இங்குத் தர்மம்
கனா காண்கிறது ..

கோயில் வாசலில்
கால் ஊனமான
ஒரு பிச்சைக்காரனிடம் இருந்து
TASMAC குடிமகனால்
சில்லறை பிடுங்கிக் கொள்ளப்படுகிறது ..
இங்குத் தர்மம்
கொள்ளையடிக்கபடுகிறது..

நள்ளிரவில்
ஒவ்வொரு பிச்சைக்காரனிடம் இருந்தும்
சில்லறைகள் எடுக்கப்பட்டு
உணவுப் பொட்டலங்கள்
போடப்படுகிறது ..

இவை அனைத்திற்கும்
முத்தாய் வருகிறது ,
இங்குத் தர்மம்
வியாபாரம் ஆக்கப்படுகிறது ..

Thursday, October 13, 2011

நிழல் ..!






எதிர்படும் இடங்களில்
என் நிழல்கள் பிறக்கிறது
ஒளிகளிடம்..

என் மீது மோதி
சிதறிய
வெளிச்சம்
என்னைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது ..

ஒளி முட்டியதில்
நான் விழுந்து விடுகிறேன்
நிழலாக ..

ஒளி என்னை
வென்று வீழ்த்திவிட்டு
என்னைக் கடந்து போகிறது ...

Wednesday, October 12, 2011

பேனாவின் மறதி ..!



எழுத்தொளி தந்து
கரைந்தொளிந்து ,
மனிதன் மனதின்
எண்ண ஓட்டத்தை
காகிதச்சுவரில்
ஒட்டிவிடும் மந்திரக்கோல்
பேனா ..
சில நேரம்
மந்திரகோல்
செயலிழந்து போகும் ..

மந்திரக்கோலையே 
மந்திரம் செய்யும்
வித்தைக்காரன்
சூழ்நிலை ..

இறந்து போன தாய் ;
செய்தி சொல்ல கடிதம்
எழுதும்போதும்  ..

படிக்காத தேர்வு ;
தேர்வறையில்
கேள்வியின்
பதிலை எழுத
முயலும் போதும் ..

யுத்தத்தின் முடிவு ;
எதிரியிடம்
தோல்வியை
ஒப்புக்கொண்டு
கையொப்பம் இடும்போதும் ..

சொல்லாமல் போன காதல் ;
தோழியின் திருமணத்தில்
வாழ்த்து மடலில்
வாழ்த்தும்போதும் ..

அவசரப்பிரிவில்
நேசத்திற்குரியவர் ;
மருத்துவ மனை
அவசரச சிகிச்சைக்காக
கையொப்பம் போடும்போதும் ..

சில நேரம்
வார்த்தைகள்
எண்ணத்தோடு
சண்டையிடும் பொழுதும்
பேனாவிலிருந்து
வெளிவர மறுத்தன
வார்த்தைகள் ..

Monday, October 10, 2011

பூசை ..!








விநாயகர் சதுர்த்தியன்று
பிள்ளையாருக்கு
படைக்கப்பட்ட கொழுக்கட்டையை
பூசை செய்யும் முன் எடுத்து உண்டான்
அந்த வீட்டுச் சிறுவன் ..

சிறு பிள்ளை
உண்டதற்காகப் பிள்ளையார்
கோபப்படவில்லை..

அந்தப் பிள்ளையின் தாய்
கோபப்பட்டாள்..

பிள்ளையாருக்குப் பதிலாக
தன் பிள்ளைக்குப் பூசை செய்து கொண்டிருந்தாள் ..

அந்தப் பூசையைப் பார்த்த பிள்ளையார் ,
அரண்டு போய்
கொழுக்கட்டையையே பார்த்துக்கொண்டு இருந்தார் ..!


Sunday, October 9, 2011

சிசு கொலை ..


நிறைமாதக் கர்ப்பிணி
பூவின் பிரசவக்காலம்
தினந்தோறும் காலையில்
காற்றின் உதவியுடன்
பிரசவிக்கிறாள் பூ ,
தன் பிள்ளையான
வாசத்தைப் பூமிக்கு ...

பிறந்தவுடன் கையேடு அழைத்துச் செல்கிறது
தன் வாசப்பிள்ளையை ,
காற்று ஊரெங்கும் ...

ஆனால் ,
ஊருக்குள் அரக்கன் இருக்கிறான்
அவன்
புகையாக
காற்றின் பகையாக
இருக்கிறான் ...

செய்தியறிந்தக் காற்று ,
செய்வதறியாது திகைத்தது...

தன் பிள்ளை வாசத்தோடு
அங்கும் இங்கும் அலைந்தது ...

காற்றையும்
வாசத்தையும்
பார்த்த பகைவன் ,
புகையாக மாறி 
கொலை செய்தான் ...

வாசம் இறந்து கிடந்தது ..
தந்தை காற்று ,
ஓவெனக் கரைந்து அழுது வீசியது ..

இப்படியாக
பிரசவமும்
பச்சிளம் குழந்தை வாசத்தின் மரணமும்
தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது ..

Wednesday, October 5, 2011

மெழுகுவத்தி ..!





மழைக்காலத்தில் ,
மின்சாரம் துயில் கொள்ளும் நேரத்தில் ,
இருட்டில்
குத்துவிளக்கிற்குச் சக்களத்தியாக
வந்து வீடெங்கும் வாழும்
மெழுகுவத்தி நீ ..

தேவாலயங்களில்
எங்கள் பிரார்த்தனை
ஒளிக் கொடுக்கும் நீ ,
கோவிலில் மட்டும்
அந்நியப்பட்டுப் போனாய் ..

அந்நியமாகிப் போனாலும்
எங்கள் வீட்டில்
ஒளிக் காட்டுகிறாய் ,
வழிக் காட்டுகிறாய் ...

தனிமையில் உருகி
திரியில் கருகி
யாரையோ எண்ணி
கண்ணீர் வடிக்கிறாய் ..

உன்னை அழவைத்து
உருகவைத்து
கரையவைத்து
வெளிச்சம் காண்கிறோம்
தேவனிடமும் கேட்கிறோம்
பாவ மன்னிப்பு ..

தேவன் மன்னிப்பாரா?
இந்தப் பாவ மன்னிப்பை..

Tuesday, October 4, 2011

எதிர்மறை ..!






பலர் நோய்களில் சிலரின்
ஆரோக்யமான வாழ்கை
மருத்துவர் -நோயாளி
சிலர் சோம்பலில்
பலரது சுறுசுறுப்பான வாழ்கை
- சலவைத் தொழிலாளி

கர்வம்..!



பொழுது விடிந்ததில் ,
அந்தச் சேவலுக்கும்
சூரியனுக்கும்
சண்டையாம் ..
நான் எழுந்ததால்
நீ கொக்கரிதாய்
எனச் சூரியனும்,
நான் கொகக்கரித்ததால்
நீ எழுந்தாய்
என்று மாறி மாறி
மோதிக்கொண்டன ..
அதன் பின் சேவலோ
சண்டையை விட்டு விட்டு
கோவில் கூட்டத்தோடு
செல்லத் தயார் ஆனது ..
அந்தச் சேவல் இங்கு வந்த
நாள் முதல்,
தான் கடவுளுக்கு
என மமதையோடு
அலைந்து வந்தது ...
பொழுது போனால் உணவு ,
பாதுகாப்பான உணர்வு ,
இப்படி வாழ்ந்த சேவலுக்குத் தெரியாது
இன்று தான் சூரியனோடு தனக்கு
கடைசிச் சண்டை என ..
சேவல் மமதைக் கூடி ,
தான் கடவுளுக்காக என்பதை மறந்து
தான் கடவுள் என எண்ணியது ...
கடவுளை திருவிழா அன்று
காணப் போகிறோம் என்ன எண்ணி
தான் இறப்பதை மறந்தது ..
கோவில் செல்லும் புறப்பாட்டின்
தொடக்கமாகச் சகல மரியாதையுடன்
கொண்டுவரப்பட்டது சேவல்..
தலைகீழாகத் தொங்க விடப்பட்ட போது ,
"பாத்து அது சாமிக்கு நேர்ந்தது ", என ஒரு குரல்..
அந்தக் குரல் சேவலின் கர்வத்தை
மேலும் உயர்த்தியது ..
குங்குமம் இட்டு ,
பூச்சூடி,
மஞ்சள் நீராட்டி
எனச் சகல மரியாதையும் சேவலுக்குத் தொடர்ந்தது ..
அதன் பின் தொடர்ந்த
நிகழ்வில் புரிந்ததுசேவலுக்குத் தான் யார் என ..
மேலே தூக்கி
கீழே இறக்கப்பட்டது ,
கழுமரத்தில் சேவல் ..
கழுமரத்தில் 
அகப்பட்ட சேவல்
வேதனையோடு
தான் நிலைமை எண்ணி இறந்தது ..
இறப்பதற்கு
சில நொடிகள் முன்புதான்
உணர்ந்தது ,
கடவுளுக்கு நேர்ந்தது
என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை ..   

Sunday, October 2, 2011

குருட்டுத் தர்மம் ..!





சில நேரங்களில்
குருட்டுப் பிச்சைகாரனிடம்
குருடனாக நடந்து கொள்கிறது
தர்மம் ..!

முரண்பாடு ..!





எதுகை இல்லை ,
மோனை இல்லை ,
புதுக்கவிதை
இலக்கணத்தின்
முரண்பாடு ..

கண்ணீர் உண்டு
ஆனால் துக்கமில்லை ,
உணர்ச்சியின்
முரண்பாடு ..

காக்கைக் கூட்டில்
முட்டையிடும் குயில் ,
தாய்மையின்
முரண்பாடு ..

புண்ணிய நதியை
அசுத்தமாக்கும் மனிதன்
நம்பிக்கையின்
முரண்பாடு ..

சாமியை மறந்து
சாமியாரை வணங்கும்
மனிதன் பக்தியின்
முரண்பாடு ..

நிகழ்காலம்
வரும்காலத்தின்
கடந்தகாலம் என்றால்
அது காலத்தின்
முரண்பாடு ..

நட்பும் இல்லை
காதலும் இல்லை
எந்த உறவிது
பருவத்தின்
முரண்பாடு ..

எழுத்து இல்லை ,
இலக்கணம் இல்லை ,
வார்த்தை இல்லை
விழி பேசும் மொழி ,
இது மொழியின்
முரண்பாடு ..

வெளிச்சத்தில்
தொலைந்து போகும்
இருள்
வெளிச்சத்தின்
முரண்பாடு ..

நினைக்காமல்
நினைக்க வைக்கும்
ஞாபகங்கள்
நினைவுகளின்
முரண்பாடு ..

சொல்லாமல் புரியும்
வார்த்தை
பேச்சின்
முரண்பாடு ..

முடிவில்லாமல்
முரண்படும் இந்த
முரண்பாடு
முரண்பாட்டின்
முரண்பாடு ..

Sunday, September 4, 2011

புரிதல் ..!






தான் கலைத்த மேகங்களை ,
தொலைந்துப் போனதாக எண்ணி
வானத்திடம்
கேட்டுக் கொண்டு இருக்கிறது
காற்று ஒவ்வொரு நாளும் ..

காற்றால்  கலைக்கப்பட்ட  மேகங்கள் யாவும்
கைத்தவறி விழுந்துச் சிதறிய கண்ணாடியாக
உடைந்து போகிறது..

உருமாற்றம் என்பது ,
முன்னம் இருந்த நிலைத் தொலைந்து போதல் என்றால்
மேகம் தொலைந்து போனது எனலாம் ..

மேகம் கலைந்து  போதல் என்பது ,
தக்கனப் பிழைத்தல் என்றால்
காற்றின் தேடல் தவறு எனலாம் ..

பெரிய வட்டத்தின்
சிறிய புள்ளி நேராக இருப்பதாக எண்ணி ,
நேராகப் போவதாக நினைத்து
வட்டமடிப்பது போல
காற்று, தான் கலைத்த மேகத்தை
தேடிக்கொண்டிருக்கிறது ..

சிறு குழந்தையின்
மழலைக் கேள்வியாகவே
காற்றின் கேள்வி வானத்திடம்
முன்வைக்கப்படுகிறது ..

இரவு பகல் என
எதுவும் பாராமல்
அதன் தேடலும் ,
கேள்வியும்
நீண்டு கொண்டே போகிறது ..

பகலின் தொலைந்துப் போன
இரவின் இருளை வெளிச்சத்தில்
தேட முயற்சிப்பதைப் போல ,
காற்றின் தேடலும்
கேள்வியும் தொடர்கிறது ..

Friday, September 2, 2011

மயக்கம் ..!




என் இறுதிக்கு
ஒரு முடிவு காத்திருந்தது 
ஓட்டத்திற்கு ஓய்வாக ..
கருக்கொண்ட நாள் முதல்
ஓயாமல் துடித்தது 
சற்று நிற்க இசைந்தது ..

சுற்றி உற்றார் உறவினர் ,
என் தண்ணீரிலிருந்து வந்த சொத்து 
கண்ணீரோடு கரைந்திருக்க ,
தன் மீதியை விட்டுச் செல்ல முடியாமல் 
கண்ணீர் வற்றி என் பாதி அழுதிருக்க .‌.

கண்விழித்த நாள் முதல் 
காட்சியின் பாரம் சுமந்து ,
உணர்ச்சியின் ஈரம் சுமந்து 
கண்கள் கேட்டது விருப்ப ஓய்வு ..

ஆனால் மனமோ 
கண்கள் மேல் நோக்கிச் செலுத்தி 
ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறது இறுதியாக 
அது 
ஒரு குரல் 
ஒரு வாசம்
ஒரு தீண்டல்
ஒரு முத்தம்
ஓர் ஊடல் 
அஃது ஏதோ ஒன்று உறுதியாக ..  

தூரத்துக் கைப்பேசியில் அழைப்பொலியாய் 
என் விருப்பப் பாடலொன்று ஒலித்தது ..
நினைவுகளின் தாழ்வாரத்தில் ஆயிரம் கதிரொளி 
வெளிச்சத்தைத் அது தெளித்தது ..

அப்போது முற்றாக விழிகள் மூடும் நேரம் 
கண்களுக்குள் நாற்றாக வந்து நின்றது
அவள் அழகிய பூமுகம் ..
மூடிய விழிகள் திறக்கவே இல்லை
 அவள் அழகைக் கண்டு மயங்கி ..

நம்பிக்கை ..!




ஓடும் இரயிலில்
பொம்மை விற்கிறார்
பார்வை அற்றவர்
அங்கே ஓடுவது ,
தண்டவாளம் மீது
இரயில் மட்டுமல்ல 
நம்பிக்கை மேல்
அவர் வாழ்க்கையும் தான் ..!

மீன்களின் சிரிப்பு ..!







சேது சமுத்திரத்தின்
சாதுவான மீனவர்கள்
திசைமாறிக் கடக்கையிலே
தினசரித் தோட்டாவின் முத்தம்..

சுருக்குக் கயிற்றால்
இறுக்கி அணைப்பு ..

மீன்களை விட வதைபட்டு
பிடிபடும் பாவப் பிறவிகள் ..

கடலில் உப்பின் கணம் கூடுகிறது
எங்கள் கண்ணீரால் ..

புத்த தேசத்து மக்களின்
கீழ்த்தரமான புத்தியால்
வதைபடுகிறோம் ,
கடற்கரையோர கருவாடாய்
மிதிபடுகிறோம் ..

தினசரி சிந்தும் இரத்தம்
கடலோடு கரைந்து
மறைந்து விடுகிறது ..

வலியால் கத்தும் சத்தம் 
காற்றில் மறைகிறது  ..

நாங்கள் பிடிக்காமல் 
விட்டுச்சென்ற மீன்கள்,
எங்களைப் பார்த்து
ஏளனமாகச் சிரிக்கிறது ..

Wednesday, August 24, 2011

தெருவிளக்கு ...!




தெருவின் ஓரம்
ஒற்றையாய் நின்று கொண்டு
இரவில் இருளின் வெளியை 
நிரப்ப முயலும்
தெரு விளக்கின் வெளிச்சத்தில்
இரவின் இருள் 
முழுவதுமாய் மாய்ந்து விடுவதில்லை ..

தெருவிளக்கிலிருந்து சிதறிய
ஒளித் துகள்கள் யாவும்
இருளின் ஒவ்வொரு
புள்ளியின் மையத்திலும்
மோதி ஒரு சிறிய போர்
ஒன்றை நடத்துகிறது ..

போரின் முடிவில்
ஒன்றையொன்று
முழுவதுமாக
வெற்றிக்கொள்வதில்லை..

முழு வெற்றியும் இல்லாத
தோல்வியும் இல்லாத
முடிவில்லா
இப்போர்
ஒவ்வொரு இரவு முழுவதும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
எல்லாப்  போரைப்போல்,
அமைதியைக் கலைத்துக் கொண்டு ..

இங்கே அமைதியை
கலைப்பது
இருளிடமிருந்து ..

மாற்றம் ..!




மாற வேண்டும் என எண்ணுகையில்
ஏதோ ஒன்று 
எண்ணத்தை மாற்றி விடுகிறது
மாறவிடாமல் ..

முயன்று
நான் மாறியப் பொழுதுகளில்
மாறாமல் இருக்கும்
சூழ்நிலைகளையும்
நினைவுகளையும்
மாற்றுவதற்காக மட்டும்
மாறாமல் முயன்றுக்கொண்டிருக்கிறேன்..

Sunday, April 3, 2011

அம்மா ..!



ஒரு வீட்டுக்குள் 
குடி கொண்டு 
அனாதையாய் வாழ்ந்து வந்தேன் ..
குடிகொண்டது
மொத்தம்
பத்து மாதம் ..

கிட்டத்தட்ட
அது தனிக்குடித்தனம் ..

குடிகொண்ட நாள் முதல்
வாடகை தந்ததில்லை ..

பாசமாக
உன்னுள் வைத்து
உபசரித்து
பாத்து மாதம் கழித்து
வெளியே தள்ளிவிட்டு
அழவைத்த
கொடிய பாசக்காரி ..

உன் அன்பில் மயங்கி
வாடகைத் தர மறந்திருப்பேன் ..
அதற்காகவா
வெளியே தள்ளி விட்டாய்?

உன் செயலால்
எனக்குக் கோபம்..
பழி தீர்த்தேன் ,
உந்தன் வயிற்றில்
எட்டி உதைத்து
நீ என்னை வெளியே
தள்ளிய வேளையில் ..

உந்தன் தண்ணீரில் இருந்து
எந்தன் கண்ணீருடன்
வெளிவந்தேன் ..

உன்னுள் இருந்த வரை
காற்றுத் தீண்ட
அஞ்சியது ..
ஒளி தொட யோசித்தது ..

வேலையில்லை,
ஒரே வேலை தூக்கம்..
சில நேர விழிப்பில்
தூக்கத்திற்கு ஓய்வு ..

தனியாக இருந்தேன்
உந்தன் துணையோடு ..

சற்றுக் குழம்பிப் போனேன்,
இங்கு எல்லாம்
தலைகீழ் ..
என்னைத் தள்ளி விட்டாய்
அதனால் எல்லாம்
தலைகீழாக
மாறிவிட்டதோ ?

பயமாயிருந்தது ,
வெளிச்சம்
கண்டு இமைத் திறக்க
விழிகளும்
அஞ்சியது ..

என்னைச் சுற்றி பலர் ,
யாரை நம்புவேன் நான்..
அங்கும் இருந்தாய்
எனக்காக நீ..

இருளில் சென்றால்
நிழலும் பயந்து
மறைந்து ஓடும் ..
நீயோ இருளில் ஒளியாக
வெளிச்சத்தில் வழியாக
இருந்தாய் ..

என்னை நீ முத்தமிட்ட
முதல் கணம்
உன்னைப் பிடித்துப் போயிற்று ..
அப்போதுணர்ந்த
உந்தன் வெப்பம்
உந்தன் சுவரிசம்
நான் சேமித்த பொக்கிஷங்கள் ..

அவை உன்னைக் கூட்டத்தில்
காட்டிக் கொடுக்கும் ஆட்காட்டி ..
குருதியை பாலாகத் தந்து
உருதியாக்கியவளே..

நீ கொடுமைக்காரி
பாசமழையில்
பச்சைக் குழந்தையை
நனைய வைத்த
கொடியப் பாசக்காரி ..

எனக்கே புரியாத
அழுகை மொழி
உனக்கெப்படி புரிந்தது என்று
புரியவில்லை ..

அழுதிடும்
முதல் கணமே,
பசியறிந்து பாலூட்டி
ஓய்வறிந்து தாலாட்டி
நோயறிந்து குணமாக்கி ..

விழிகளில்
கண்ணீர் வழிந்திட்டால்
உன் நெஞ்சில்
வெந்நீர் உணர்ந்திட்டாய் ..

உன் வாய்மொழியில்
உணர்ந்தேன்
என் தாய் மொழியை ..

தவழ்ந்த போது
உன் கையைப் பிடித்து
நடைப் பழகிய போது ,
அம்மா என
உன்னை அழைத்த போது
உன் மகிழ்ச்சிக்கு இணை இல்லை,
அதை எழுதிட வானமே எல்லை ..

நீ ஊட்டும்
பால் சோற்றிடம்
யாசிக்கும்
தேவலோக அமுதமும் ..

நோயுற்றால்
உன் அன்பிடம்
யாசிக்கும்
குணமாக்கும் மருந்தும்..

நீ பாடும்
தாலாட்டிடம்
யாசிக்கும்
சப்தசுவரங்களும் ..

சோகமாக
உன் மடியில் படுத்தால்
வேகமாக
சொர்க்கமே வந்து
மகிழ்வித்திடும்..

கடவுள் யார் என
அடையாளம்
காட்டும்
என் கடவுள் நீ ..

மந்திரங்களும்
செய்யும் ஜாலங்களும்
தோற்றுபோகும்,
எக்காலமும்
எல்லோரும்
முதன் முதலில்
சொல்லும் மூன்றெழுத்து
மந்திரம்
-அம்மா ..!

Sunday, March 27, 2011

நம்பிக்கை ..!




இலைகள் யாவும்
காம்பின்
நுனியில் ,
காற்றின் தாலாட்டில்
ஊஞ்சல்
ஆடுகிறது ..!

மறுபக்கம் ..!





இருள்
கண்ட காட்சி மட்டும்
யாரும்
காண முடிவதில்லை,
இருளைத்  தவிர ..!

வலித்துகள்கள் ...!




ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும் ,
மனதில் உடைந்து
வெளியே சிதறும்
வலிகள் ...!

Saturday, March 19, 2011

ஒரு தலைக்காதல் ..!




பிடித்த இடத்திலிருந்து
பின் தொடர்ந்து செல்கிறது
தன் பயணத்தை நீட்டிக்  கொண்டு தீப்பொறி
சிதறிய எரிபொருளுக்காக 

போகும் பாதையில்
கோபமாய்
வழிபடும் இடர்களை எரித்து
மிச்சத்தை எச்சமாய்
வழித்தடமாக்கி விடுகிறது
மறந்துபோய் 

இதுவரை
யாருக்கும் தெரியாமல் இருக்க
இப்போது காட்டிவிட்டது
பாதையை 

தெரிந்துவிட்டது
குறிக்கோள் ,
இருப்பினும்
பின் தொடர்கிறது
அதன் நீளம் முழுக்க 

அடைவதையே
எண்ணிக்கொண்டு
தூரம்
காலம்
ஆபத்து
ஏதும் எண்ணவில்லை 

இறுதியாக
வந்தது பயணத்தின் 
முற்றுப்புள்ளியாய்
சிதறிய எரிபொருள் 
இடைவெளியில் 

தொடர்ந்தது
இந்த முற்றில் 
முடிந்தது

இறுதியாய்
அடைந்த இடத்தில், 
ஏக்கத்தோடு எரிந்து முடிந்தது
தீப்பொறியின் பயணம் 

இடைவெளியின்
முடிவில்
தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது
அந்த எரிபொருளின் சிதறல் ..!


Saturday, March 12, 2011

என் விசையிழந்த திசைகள் ..!





என் விசையிழந்த
திசை நோக்கி
பயணம் செய்தேன் ஒரு நாள் ..

அங்கு நான்,
தோல்விகளை
வென்றேன் ..
வெற்றிகளை
தோற்றேன் ..

எதைக் கொண்டாட,
எதை வருத்தப்பட,
என எண்ணி
வருத்தப்பட்டுக் கொண்டாடினேன் ..

அங்கு முயற்சிக்கு
என்றுமே பலனில்லை,
தோல்வியே ஜெயம்
முயற்சி தீவினையாக்கும் ..

என் எதிரிகளின்
கனவுப் பிரதேசம் அது..

என் தசைகளை ருசிக்காமல்
தோல்வியை ருசிக்கும்
பருந்துகளின் சொர்க்க பூமி ..

என் வலிகளையும்
அலறலையும்
இரத்தத்தையும்
உறியும்
காட்டேரிகளின்
உலகம் அது ..

யார் செய்த சூன்யமோ தெரியவில்லை
ஒன்றுமே விளங்குவதில்லை
இந்தத் திசையில் ..!

Monday, March 7, 2011

பயம்…!



இருள் கண்டு
பயந்தவர்கள் கூட
கண் விழித்து
உறங்குவதில்லை…!

Sunday, March 6, 2011

யார் குற்றம்...!





கொலை
செய்துவிட்டேன்,
குற்றம் யாருடையது
கத்தியுடையதா?
என்னுடையதா?

மாயை ..!





விழித்திருந்தேன்,

உறங்கிவிட்டேன்,
எழுந்து பார்த்தால்
கனவு ..!