Saturday, May 26, 2012

கவிதை...!




கவிதை,
பல நேரம்
இரவில் விழிக்கும் ..

கவிதை,
அமைதியான மனதில்
சத்தம் போடும்  ..
கவிதை,
ஒரு கழுதைப் போல
நினைவுகளைச் சுமக்கும்
திடீரென எட்டி உதைக்கும்
இலக்கியக் காகிதங்களைத் தின்னும் ..

கவிதை,
மனதோடு உறவாடி
நினைவோடு ஒளியும்  ..

கவிதை,
மனதோடும் என்னோடும்
கண்ணாமூச்சி ஆடுகிறது
அதைக் கண்டு பிடித்தால்
எழுத்தாய் வார்த்தையாய் மாறும்  ..

கவிதை,
நிலவோடும்
பெண்ணோடும்
அதிகம் உறவாடும்  ..

கவிதை,
ஆண்களைப் போல்
அழகில் மயங்கும்  ..

கவிதை
பெண்களைப்  போல்
எத்தனை முறை படித்தாலும்
புரியாமல் போகிறது ..

கவிதை,
பொய் பேசும்
சந்தம் பாடும்
மரபு நவீனம் புது என பல வேடம் போடும் ..

கவிதை..
இசையோடு மாலை சூட்டும்
பாடலை பிரசவிக்கும் ..

கவிதை
கடவுளையும் மயக்கும் ..

கவிதை
சிந்தையில் வார்த்தைகள் நோக்கி
நினைவுகளை வேள்வியாக்கி
ஒரு கவிஞன் இருக்கும் தவம் ..

கவிதை
எண்ணங்கள்
எழுத்துகளில் ஆடும்
அழகிய நாட்டியம்  ..!

Sunday, May 20, 2012

வாசம்..!





பால் வைத்த
புது நெல்மணியின்
அழகிய வாசம் ...!

பால் குடி மறவா
பிள்ளையின்
தூய்மையான பால் வாசம் ..!

மழைமண்ணில் இட்ட முத்தத்தில்
பூமிப்பெண்ணின் 
நாணமாக வரும் மண் வாசம் ..!

கிராமத்தவர்கள்
பேச்சில் வீசும்மண் வாசம் ..!

கோவில் கருவறையுள்
இருக்கும் தெய்வீக வாசம்..!

தாயின் கருவறையில்
நாம் உணராத தெய்வீக வாசம்..!

பூந்தோட்டத்தில்
காற்றோடு கை கோர்த்து
வரும் மகரந்த வாசம் ..!

சவ ஊர்வலத்தில் சவமாகிப்போகும்
தூவப்படும் பூக்களின் வாசம் ..!

நேர்மையாய்
வியர்வையாய்
உழைக்கும்
உழைப்பாளியின் வியர்வையின் வாசம் ..!

போலியாய்குளிர் அறையில்
ஏமாற்றிப் பிழைக்கும்
வஞ்சகர்கள் மேல் வரும்
அத்தரின் வாசம் ..!

கட்டிலில் பூக்கள்
ஆசை தந்து
பத்து மாதம் களித்து
ஓசைதரும்
மோகத்தின் வாசம் ..!

இறந்தவர் உடலில் பூக்கள்
உலகின் நிலையாமையை
எடுத்துச் சொல்லும்
மரணத்தின் வாசம் ..!

இவற்றில் எது காட்டுகிறது
வாசத்தின் உண்மையான வாசம் .. ?