Saturday, February 26, 2011

ஹைக்கூ -2...!





மீன்களின் சிரிப்பு ...!

தொலைக்காட்சியில்
வருகிறோம் என
எண்ணி சிரிக்கிறது,
அந்த மீனவப்பிள்ளை,
தன் தந்தை நடுக்கடலில்
கொல்லப்பட்டதன்
விளைவுகள் புரியாமல் ...!

வறுமையின் சத்தம்...!

வறுமையின் சத்தம்
மின்சார இரயிலில் கேட்கிறது ,
குருட்டுப் பிச்சைக்காரனிடமிருந்து,
இரயில் சத்தத்தையும் தாண்டி...!

துப்பாக்கியின் சத்தம்....!

துப்பாக்கியின் உண்மையான சத்தம் கேட்கிறது
துப்பாக்கிச் சூட்டில் அடிப்பட்ட ,
குழந்தையின் - அழுகுரலில்...!

யுத்தம் !

யுத்தங்கள் அனைத்தும்
அமைதியை நோக்கித் தான் நடக்கிறது  ,
அமைதியை கல்லறையில் தேட ...!

திண்ணை தேடும் வீடுகள் ...!

ஓய்வு எடுக்கத் திண்ணை
தேடிய மனிதன் மறைந்து போய்
இப்போது ,
திண்ணைகள் வீடுகளை
தேடுகிறது ...!

பாவ - மன்னிப்பு...!

மெழுகுவர்த்தியை
அழவைத்து ,
தேவனிடம்
பாவ - மன்னிப்பு ...!

பணம் !

ஏழைகளின்
அகராதியில் ,
அச்சுப்பிழைகள்
பணம் ...!

பசி ...!

மீதமான உணவை
தெருவில் கொட்டும் ஒவ்வொரு
பருக்கையிலும்
கூடுகிறது
ஏழையின் பசி ....!

கட்டாயம்..!

காட்சிகள்
சரியாகத் தெரிய
கண்ணாடி போட்டும்
தெரியாத வாறே
நடிக்கச் சொல்கிறார்கள்
-இது காலத்தின் கட்டாயம்…!

வெட்டு..!

வெட்டி எடுத்தேன்,
உயிர் பறிக்க இல்லை,
உயிர் விதைக்க,
மண்ணை – மண்வெட்டி

தப்பு-தாளம்…!

தப்பை
சரியாய்
அடித்தால்
-அது தாளம்…!

புகையின் வாசம்…!

மாநகரச்சாலை
ஓரப்பூங்காகளிலுள்ள
பூக்களும்
மணக்கிறது
புகையின் வாசமாய்…!

Sunday, February 20, 2011

நினைவுகள்..!



வட்டமான நினைவுகளின் நீளத்தை,
விட்டமிட்டு அளக்க முடியாது ..

மறக்க நினைப்பதையே
மறக்கச்  செய்யும் ..

நினைக்க நினைப்பதையே
நினைத்துக் கொல்லும் ..

கட்டிப் போட்டதை,
எட்டி உதைத்து
இட்டுச் செல்லும்
நினைவுகளில்..

உண்மைகளின் போலி
அசலாய் நினைவுகள்..

சில உணர்ச்சிகளின் 
கல்லறையாய் நினைவுகள்..

நினைப்பதால் நினைவுகளல்ல.
நினைக்க வைப்பதால் தான் நினைவுகள்..!

Thursday, February 17, 2011

ஹைக்கூ-1




நிகழ்வுகள்..!

பிடிக்கவில்லை
கொலை செய்தேன்
தண்டனையில்லை,
நிகழ்வுகளை…!

வெற்றி-தோல்வி..!

தொடர்கிறேன்,
துரத்துகிறது
வெற்றி-தோல்வி..!

விண்மீன்..!
சிதறிவிடப்பட்ட
கோலங்களும்
அழகாக ஜொலிக்குமோ,
-விண்மீன்..!

அருவி..!
காதல் கொண்ட
காமமோ,
-அருவி..!

இசை..!
சத்தத்தின்
பூப்பெய்தல்
-சுரங்கள்..!

முயற்சி..!

கேள்விக்கும்
பதிலுக்கும் இடைப்பட்ட
தூரம்தான் முயற்சி…!

யோசனை…!

தினமும் யோசித்துக்  கொண்டிருக்கிறேன்
எது மாறாதது என்று?
சற்று நேரத்தில்
என் யோசனையே மாறிவிட்டது..!

குற்றம்..!

கொலை செய்துவிட்டேன்
குற்றம் யாருடையது,
கத்தியுடையதா?
என்னுடையதா?