அன்பு
தண்ணீரைப் போல்
இறுகப் பற்றாமல்
கைகளில் ஏந்துங்கள்
வசப்படும்
எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
முதலையின் பற்களின் இடுக்குகளில்
மாமிசம் கொத்தி தின்கிறது பறவை
முதலை தரும் அனுமதி
நமது ஓட்டுரிமை
பறவையின் தேவை வேறு
முதலைக்குத் தேவை வேறு
காற்றின் திசையில்
முரண்டு பிடித்தபடி
இருக்கி கட்டி அணைத்து
திரியை பிரிய மறுக்கிறது
தீபம்
தீபம் நமதன்பு
காற்று நமதுறவு ...
இந்த உலகில்
அதிகமாக சொல்லப்படும்
பொய்களில் சில
"நன்றாக இருக்கிறேன்"
"கவலைப்படாதே, ஒன்றும் ஆகாது"
"நான் இருக்கிறேன்"
சில நேரம்
பொய்கள் தான் நம்மை
உண்மையாகவே வாழ வைக்கிறது ...
குழந்தைகள் கைபிடித்த வாஞ்சையில்
மயங்கி வானில் பறந்துபோன பலூன்
நிச்சயம் சொர்க்கம் சேர்ந்திருக்கும்
குழந்தைகளுடன் கண்ணாமூச்சி
விளையாடும் பொழுது
முதலில் மறைவது நம் கவலை
சாலையோர அனாதை பொம்மைகளை
வீட்டிற்கு அழைத்து வந்து பெயர் சூட்டி
ஆதரவு அளிக்கிறார்கள் குழந்தைகள்
குழந்தைகளின்
கிறுக்கல்களும் மழலைச் சொற்களும்
கடவுளின் கையெழுத்தும் மொழியும்
குழந்தைகளின் பக்தி
மெழுகுவர்த்திக்கும்
குத்து விளக்குக்கும்
வேறுபாடு அறியாது
குழந்தைகளின் ஜன்னல்கள்
கதவுகளும் தடுப்புகளும் அற்றவை
அங்கே காற்றுக்கு எந்தத் தடையும் இல்லை