Saturday, October 11, 2025

எரியும் இரவுகள்


சாவற்ற சாபம் பெற்ற நினைவுகள்

கருவுற்றுப் பிரசவிக்கும் போதெல்லாம்

கனவில் வரும்  ஒரு பட்டாம்பூச்சி

பறக்க முடியாமல்

நடந்து போகிறது 


விருப்பமான நிறைவேறாத ஆசைகள்

பாலைவனப் புயலில்

புழுதி படிந்தபடி நடக்கையில்

அங்குத் தெரிந்த கானல் நீரை

தன் தாகம் தீர்க்கும்

என்ற நம்பிக்கையில் குடிக்கிறது 


சவப்பெட்டியில் அடக்கமான உணர்வுகள்

முகப்புத்தகத்தில் இறந்து போனவரின்

நேர்க்கோட்டில் எழுதப்பட்ட

பிறந்தநாள் வாழ்த்தின்

அர்த்தம் புரிய முயற்சிக்கிறது


அழகிய பிரமையில் மயங்கியிருக்கும்

குழந்தையின் ஆடல் போலக்

காற்றில் பறந்தபடி ஆடுகிறது

உன் பெயர் எழுதப்பட்ட காகிதம்

எரியும் இரவுகளின் வெளிச்சத்தில்

மீண்டும் ஒரு முறை

பின் தொடர்ந்து

படிக்க முயற்சிக்கிறேன் 

No comments: