Sunday, October 26, 2025

தீபங்கள் பேசும்

 




மேய்ப்பரைத் தேடிக் கொண்டு அலைவது
ஆட்டு மந்தைகளின்
ஆதி காலத்துக் குணம்

புது மேய்ப்பன் கையில்
கவர்ச்சிப் புற்கள் கண்டால்
மந்தைகள்
புது மேய்ப்பன் தேடி ஓடும் 

குடிமை உணர்வற்ற
சுயநலமிக்க
மந்தைகளுக்கு
எந்த மேய்ப்பனும்
ஆடுகள் வளர்ப்பது
கசாப்புக்கு 
என்ற உண்மை புரிவதில்லை

பால் குடிக்கும் குட்டிகளுக்கு
கவர்ச்சிப் புற்கள் 
எதற்கு என யோசிப்பதுமில்லை

உயிர்களின் மதிப்பையே
உணராத தேசத்தில்
ஓட்டுக்களின்
மதிப்பும் உணரப்போவதில்லை

குழந்தைகளின் படங்கள்
முன் ஏற்றப்படும் தீபங்கள் போல 
எதுவும் ஒரு குடும்பத்தை
இருட்டடிப்புச் செய்வதில்லை

பிணம் கண்டு உயிர்த்தெழுந்த
அரசியல் திண்ணிகள் கண்டு
அஞ்சிய அந்தத் தீபங்கள் 
நடுங்கிய படி
காற்றில் மூச்சுத் தினறி
ஏதோ பேசுகிறது

No comments: