நதியில் விளையாடிய காட்சி,
ஒரு கருவாட்டின் கண்ணில்
கடைசி நினைவாகப்
பொதிந்திருக்கலாம்
மேகத்திலிருந்து நதியின்
காய்ந்த மடியில் விழுந்து
மணலில் புதைந்து மடிந்த
மழைத்துளி
இறுதியாகத் தேடியிருக்கலாம்
பால் சுரக்காத மார்பைப் போல
நீரில்லா நதியை விடாமல் அறுக்கும்
மணல் லாரி
தன் கிளீனர் இங்கே
என்றோ குளிப்பாட்டிய நினைவில்
ஒரு நொடி வந்திருக்கலாம்
ஏரிக்கரையோர அடுக்குமாடிக்குடியிருப்புச்
சுவரில் உறங்கிக் கொண்டிருக்கும் மணல்
ஏரிக்கரை நீர்ச் சலசலக்கும்
சத்தம் கேட்டு ஏங்கியிருக்கலாம்
இரவில் தன் முகம் பார்க்கும்
நீண்டக் கண்ணாடியைத்
தேடுகையில் நினைத்திருக்கலாம்
சேய்க் காணாத தாய் போல
முகத்துவாரத்தில் அலையும்
கடலின் தேடலிலிருக்கலாம்
நாகரீகத் தொட்டில் தந்து வளர்த்தத் தாயை
வளர்ச்சியெனக் காரணம் தந்து
மனிதன் இன்று மறந்தது ஏனோ

No comments:
Post a Comment