தன் ஆயுள் முழுக்க
வானத்தை அளக்க எண்ணி
தோற்றுப் போகிறது
பறவை
எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
குழந்தையின் கை பிடித்த மகிழ்ச்சியில்
காற்றில் பறந்த படி
துள்ளி குதிக்கத் தொடங்குகிறது பலூன்
பலூனில் நிரப்புப்பட்டிருக்கும்
மூச்சுக்காற்றால் மீண்டும் உயிர்ப்பெற்றது
குழந்தையின் மகிழ்ச்சி
அந்தவீட்டின் கறி சோற்றின்
வாசம் பிடித்த பலூன்
அடுப்படி பக்கம் திரும்பியது
குழந்தையும் பின்தொடர்ந்து
கொதிக்கும் குழம்பை
ருசிபார்க்க எண்ணி
குழம்புச் சட்டியின் அருகில் சென்று
தன் ஆயுளை முடித்துக்கொண்டது
குழந்தைகள் இந்தப் பூமியில்
சந்திக்கும் முதல் வன்முறை
பலூன் வெடித்துச் சிதறுவது
கூதிர் காலக் காலையில் மலர்ந்து
கடவுள் சேரும்
கருவறைப் பூ ஒன்று
மலத்தை உரமாய்ச் செரித்துப்
புதராய் மலரும்
கல்லறைப் பூ ஒன்று
அங்கு வந்த ஒரு
வண்டால் நிகழ்ந்தது
அயல் மகரந்தச் சேர்க்கை
அன்பால் விளைந்து
சாதியற்று புதியதோர் வகையாய்
புதிதாய்ப் பூக்கத்தொடங்கியது
ஒரு மொட்டு
புதியதோர் மொட்டு
மலரக் கண்டு சினம் கொண்ட
காவல் கூட்டம்
கல்லறைக் காட்டைக் கொளுத்தியது
தீட்டெனச் சொல்லப்பட்ட
புதியதோர்
மொட்டை கருவறுத்து
பூவைத் தீயில் பொசுக்கியது
தீயில் கருகியப்
பூக்களின் சாம்பல்
காற்றில் பறந்தபடி
தனது காதலைத் தேடத் தொடங்கியது
மீண்டும் ஒரு வண்டு
பூக்களைத் தேடிப் பறந்தபடி
புதியதோர் அயல் மகரந்தச்
சேர்க்கைக்குத் தயாரானது
மகனே நீ பிறக்கையில்
உன் அழுகைக்குப் பிறந்தது என் சிரிப்பு ...
உன்னைக் கைகளில் ஏந்திய முதல் தருணம்
என் உலகமே எந்தன் கைகளுக்குள் அடங்கியது ...
நீ என் விரல் பற்றிக் கொண்டு உறங்கினாய்
நம்பிக்கை என்னுள் விழித்துக் கொண்டது ...
உன் பிஞ்சுப் பாதங்கள் என் முகத்தை உதைக்கையில்
கடவுள் என்னை ஆசீர்வதிக்கத் தொடங்கினார் ...
உன் கோபங்கள் முன் மண்டியிட வைத்து விடுகிறாய்
நான் என்னும் அகங்காரத்தையும்
உன்னோடு கண்ணாமூச்சி விளையாடுகையில்
என் கவலைகளும் மறைந்து ஒளிந்து கொள்கிறது
உன்னோடு பருப்பு கடைந்து விளையாடுகையில்
உண்ணாமல் வயிறு நிரம்புகிறது
உறக்கம் கலையாமல் உன்னை முத்தமிட முயன்று
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறேன்
சில வரிகளில் உன்னை எழுத முயலும் இந்தக் கவிதைப் போல் ...
அகமும் பேசும்
புறமும் பேசும்
அழகாய் பொய் பேசும்
கேட்க கேட்க மயக்கும்
கேட்பவரே ரசிக்கும்படி குத்திக் காட்டும்
அடி அடியாய் எடுத்து வைத்து சீராய் அசையும்
கருவாவது ஓர் இடத்தில்
வாழ்வாங்கு வாழ்வது வேறு இடத்தில்
குழந்தையாக ஹைக்கூ
குமரியாகக் காதல் கவிதை
தோழியாகப் புதுக்கவிதை
மனைவியாக எதிர் கவிதை
தாயாக மரபுக்கவிதை
சில நேரம்
எத்தனை முறை படித்தாலும் புரிவதில்லை..