Sunday, September 14, 2025

தேடல்

 




தன் ஆயுள் முழுக்க

வானத்தை அளக்க எண்ணி

தோற்றுப் போகிறது

பறவை 

Saturday, August 23, 2025

அன்பை விளக்கும் சொல்



அன்பின் பிரசவம்
எப்பொழுதும் நிகழும் 
 
கருவில் இருக்கும் சிசு
காணும் கனவில்

பிறந்த குழந்தைக்கு
பசி அமர்த்தும் முலையில்

கண்ணீர்த் துளிர்க்கும் முகம் கண்டு
கட்டி அணைத்து குழந்தை தரும் முத்தத்தில்

ஊடலை உடைத்தெறிய பேசாமல் மேசைமேல்
வைக்கப்பட்ட ஒரு தேநீர்க் கோப்பையில்  

இறுதிச் சந்திப்பின் கடைசி முத்தத்தில்
பிரிவின் சுவைக்  கூட்டிய கண்ணீரில்  

இறந்தவரின் கைபேசி எண்ணை
அழிக்கும் போது கைகளின் நடுக்கத்தில்  

தன் எஜமானுக்காக இரயில் நிலையத்தில்
ஆயுள் முழுதும் காத்திருந்த நாயின் கண்களில்

இப்படியாக 
அன்பை விளக்கச் சொற்கள் தேவை இல்லை
சொல்லித்தான் புரியுமெனில் அங்கு அன்பு இல்லை  .. 

Sunday, August 17, 2025

குழந்தையும் பலூனும் 

 



குழந்தையின் கை பிடித்த மகிழ்ச்சியில்

காற்றில் பறந்த படி

துள்ளி குதிக்கத் தொடங்குகிறது பலூன் 


பலூனில் நிரப்புப்பட்டிருக்கும்

மூச்சுக்காற்றால் மீண்டும் உயிர்ப்பெற்றது

குழந்தையின் மகிழ்ச்சி 


அந்தவீட்டின் கறி சோற்றின் 

வாசம் பிடித்த பலூன்

அடுப்படி பக்கம் திரும்பியது

குழந்தையும் பின்தொடர்ந்து


கொதிக்கும் குழம்பை

ருசிபார்க்க எண்ணி

குழம்புச் சட்டியின் அருகில் சென்று

தன் ஆயுளை முடித்துக்கொண்டது 


குழந்தைகள் இந்தப் பூமியில்

சந்திக்கும் முதல் வன்முறை

பலூன் வெடித்துச் சிதறுவது

Sunday, August 10, 2025

மழை ரொம்பப் பிடிக்கும்

 



மழைப் பொழியும் ஒரு மாலை ,
ஜன்னல் வழியே மழை என்னை
ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது

கையில் தேநீர்க் கோப்பை
அதில் இறந்து போன நினைவுகள்
ஆவியாகிப் பறந்துப் போய்க் கொண்டிருந்தது 

கையோடு என் கைபேசி 
அதில் நீ அனுப்பிய பழைய குறுஞ்செய்தி ,
வந்து வந்து போனது பொய்பேசி 

காதோரம் மெல்லிய பாடல்
கண்மூடி நிற்கையில் ஏதோ தேடல்
தேடல் முடிவில் கண்ணோடு அழகாய் வந்தாய்
நினைவோடு என்னைப்
பல காலம் கடந்து கடத்திச் சென்றாய் 

மீண்டும் நாம் 
அதே மாலை வேலை 
அதே ரயில்வே சாலை 
மழைத் தூறும் நடைபாதையில்
நீ எந்தன் கைப் பிடித்துக் கொண்டாய்
தண்டவாளம் பிடித்து நடக்கும்
ரயில் போல் நான் உனைப் பிடித்துக்கொண்டேன்

மழை வேகம் பிடிக்க,
நாம் குடை பிடிக்க ,
காற்று நம் மீது சாரல் தெறிக்க 
வேகம் பிடித்த காற்றோடு
குடை கொண்டு சண்டையிட்டுத்
தோற்றுப்போணோம்

மழையில் நனைந்தோம் ,
காதல் மழையில்‌ கரைந்தோம்
காலம் கடந்தது ,
கண்ணீர் மழையில்
காதல் கரைந்தது
 
ஜன்னல் கண்ணாடியின் வியர்வையில் 
உன் பெயரை எழுதி வைத்தேன் 
மழை வந்து உன்னைக் களவாடிச் சென்றது 
என்றோ மழையென்றால்
ரொம்பப் பிடிக்கும் என
நீ சொன்ன ஞாபகம் ...

Saturday, August 2, 2025

அயல் மகரந்தச் சேர்க்கை

 




கூதிர் காலக் காலையில் மலர்ந்து

கடவுள் சேரும்

கருவறைப் பூ ஒன்று


மலத்தை உரமாய்ச் செரித்துப்

புதராய் மலரும்

கல்லறைப் பூ ஒன்று


அங்கு வந்த ஒரு

வண்டால் நிகழ்ந்தது

அயல் மகரந்தச் சேர்க்கை


அன்பால் விளைந்து

சாதியற்று புதியதோர் வகையாய்

புதிதாய்ப் பூக்கத்தொடங்கியது

ஒரு மொட்டு


புதியதோர் மொட்டு

மலரக் கண்டு சினம் கொண்ட

காவல் கூட்டம்

கல்லறைக் காட்டைக் கொளுத்தியது


தீட்டெனச் சொல்லப்பட்ட

புதியதோர்

மொட்டை கருவறுத்து

பூவைத் தீயில் பொசுக்கியது


தீயில் கருகியப்

பூக்களின் சாம்பல்

காற்றில் பறந்தபடி

தனது காதலைத் தேடத் தொடங்கியது


மீண்டும் ஒரு வண்டு

பூக்களைத் தேடிப் பறந்தபடி

புதியதோர் அயல் மகரந்தச்

சேர்க்கைக்குத் தயாரானது

Friday, July 11, 2025

மகனதிகாரம்



மகனே நீ பிறக்கையில் 

உன் அழுகை‌‌க்குப் பிறந்தது என் சிரிப்பு ...


உன்னைக் கைகளில் ஏந்திய முதல் தருணம்

என் உலகமே எந்தன் கைகளுக்குள் அடங்கியது ...


நீ என் விரல் பற்றிக் கொண்டு உறங்கினாய்

நம்பிக்கை என்னுள் விழித்துக் கொண்டது ...


உன் பிஞ்சுப் பாதங்கள் என் முகத்தை உதைக்கையில்

கடவுள் என்னை ஆசீர்வதிக்கத் தொடங்கினார் ...


உன் கோபங்கள் முன் மண்டியிட வைத்து விடுகிறாய்

நான் என்னும் அகங்காரத்தையும்


உன்னோடு கண்ணாமூச்சி விளையாடுகையில்

என் கவலைகளும் மறைந்து ஒளிந்து கொள்கிறது


உன்னோடு பருப்பு கடைந்து விளையாடுகையில்

உண்ணாமல் வயிறு நிரம்புகிறது 


உறக்கம் கலையாமல் உன்னை முத்தமிட முயன்று

ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறேன்

சில வரிகளில் உன்னை எழுத முயலும் இந்தக் கவிதைப் போல் ...


Friday, July 4, 2025

பெண்மையும் கவிதையும்

                         


அகமும் பேசும்

புறமும் பேசும் 

அழகாய் பொய் பேசும்

கேட்க கேட்க மயக்கும்

கேட்பவரே ரசிக்கும்படி குத்திக் காட்டும்

அடி அடியாய் எடுத்து வைத்து சீராய் அசையும்


கருவாவது ஓர் இடத்தில்

வாழ்வாங்கு வாழ்வது வேறு இடத்தில்

குழந்தையாக ஹைக்கூ

குமரியாகக் காதல் கவிதை

தோழியாகப் புதுக்கவிதை

மனைவியாக எதிர் கவிதை

தாயாக மரபுக்கவிதை 


சில நேரம்

எத்தனை முறை படித்தாலும் புரிவதில்லை..