Friday, July 11, 2025

மகனதிகாரம்



மகனே நீ பிறக்கையில் 

உன் அழுகை‌‌க்குப் பிறந்தது என் சிரிப்பு ...


உன்னைக் கைகளில் ஏந்திய முதல் தருணம்

என் உலகமே எந்தன் கைகளுக்குள் அடங்கியது ...


நீ என் விரல் பற்றிக் கொண்டு உறங்கினாய்

நம்பிக்கை என்னுள் விழித்துக் கொண்டது ...


உன் பிஞ்சுப் பாதங்கள் என் முகத்தை உதைக்கையில்

கடவுள் என்னை ஆசீர்வதிக்கத் தொடங்கினார் ...


உன் கோபங்கள் முன் மண்டியிட வைத்து விடுகிறாய்

நான் என்னும் அகங்காரத்தையும்


உன்னோடு கண்ணாமூச்சி விளையாடுகையில்

என் கவலைகளும் மறைந்து ஒளிந்து கொள்கிறது


உன்னோடு பருப்பு கடைந்து விளையாடுகையில்

உண்ணாமல் வயிறு நிரம்புகிறது 


உறக்கம் கலையாமல் உன்னை முத்தமிட முயன்று

ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறேன்

சில வரிகளில் உன்னை எழுத முயலும் இந்தக் கவிதைப் போல் ...


Friday, July 4, 2025

பெண்மையும் கவிதையும்

                         


அகமும் பேசும்

புறமும் பேசும் 

அழகாய் பொய் பேசும்

கேட்க கேட்க மயக்கும்

கேட்பவரே ரசிக்கும்படி குத்திக் காட்டும்

அடி அடியாய் எடுத்து வைத்து சீராய் அசையும்


கருவாவது ஓர் இடத்தில்

வாழ்வாங்கு வாழ்வது வேறு இடத்தில்

குழந்தையாக ஹைக்கூ

குமரியாகக் காதல் கவிதை

தோழியாகப் புதுக்கவிதை

மனைவியாக எதிர் கவிதை

தாயாக மரபுக்கவிதை 


சில நேரம்

எத்தனை முறை படித்தாலும் புரிவதில்லை..

அப்பா


உலகில் அதிகம் எழுதப்படாத கவிதை

சரியாகப் புரிந்து கொள்ளப்படாத கவிதையும் கூட


பிள்ளையின் முதல் அழுகைக்கு

பிறக்கிறார் அப்பா


அப்பாவின் கைகள் பற்றிக் கொள்ளும் தருணம்

நம்பிக்கையும் பற்றிக்கொள்ளும்


அம்மாவின் நிழலில் நம்மை இளைப்பாற விட்டு

சூரியனை அணைத்துக் கொள்ளும் பெரு வெளிச்சம்


கத்தரித்துக்கொள்ள இயலாத பேரன்பின் தொப்புள் கொடியை

யாருக்கும் தெரிய வண்ணம் உள்ளுக்குள்ளே வைத்திருப்பார்


நம் கண்ணீர்த் துளிகள் துடைத்தெறியும் விருப்பமான கைக்குட்டை

கனவிலும் வந்து விருப்ப உணவு ஊட்டி விட்ட மாய வித்தைக்காரர்


என்னில் இருக்கும் அத்தனையும் உன்னிலிருந்து வந்தது

இடியுடன் கூடிய மழையாய் கண்டிப்புடன் அன்பு நீ தந்தது


அப்பாவின் செருப்பு நாம் அணியும் வரை

அந்தக் கால்களின் வலி புரிவதில்லை

Saturday, March 29, 2025

காலமும் காதலும்

 


கண்களுக்குள் சிறைப்பட்டு வாழும்
யாரும் பார்க்காத கண்நீர்த்துளியை போல
நாம் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில்
காலமும் காதலும் சிக்கிக் கிடக்கிறது
அதைப் பார்த்த நொடியில்
காலம் விடுதலையாகிறது

மறந்துபோன கல்லறை மேட்டின் மேல் கட்டப்பட்ட
யாரும் வாழாத புதிய வீட்டில் உறங்கும் பூனையைப் போல
நாம் பேசிய உரையாடல்கள் புதைந்திருக்கும் கைபேசியில்
காலமும் காதலும் உறங்கிக் கிடக்கிறது
அதைப் படித்த நொடியில்
காலம் விழித்துக் கொள்கிறது

கடலில் இருக்கும் மீன் மழையில் நனையும் ஆசையில்
மேலே குதிக்கும் பொழுதினில்
அலை மேலெழும்பி மீண்டும் கடலுள் இழுத்துச் செல்லப் பார்க்கும்
காதலில் காலம் அப்படியே



Saturday, February 15, 2025

நட்சத்திரங்களின் வருகை

 




சூரியனாக இருந்த உன் அன்பின் வெளிச்சம்

நிலவாக என்னை வாழ வைத்தது

ஒரே வானில் என்றும் சேர முடியாத நமது பெருவாழ்வு

கிரகணத்தின் சில கணத்தில் மட்டும் விதிவிலக்கு


திடீரென மெல்ல மெல்ல விட்டு விலகி

தொலைதூர நட்சத்திரமானாய்

பின்பு ஒரு நாள் மின்சார வெளிச்சத்தில் தொலைந்தும் போனாய்

இந்த வெளிச்சம் மட்டும் ஏன் என் வாழ்வை இருட்டடித்தது ?


உன் ஒளி குடித்துப் பழகிய நிலவு நான்

வேறு ஆயிரம் நட்சத்திரங்களின் வருகையும்

என்னை நிரப்புவதில்லை

பல ஒளி ஆண்டுக் கடந்த பின்னும்

உனது வெளிச்சம் என் நெஞ்சில் குறையவுமில்லை


வானில் எங்கும் உன்னைத் தேடியபடிக் கரைகிறேன்

இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடலாம்

வெளிச்சத்தில் தொலைத்ததை எதில் தேட?


Friday, January 10, 2025

பனிபடரும் நினைவு


பறவை இறந்த பின்பும்
அது உதிர்த்த ஓர் இறகு பறந்து கொண்டிருக்கிறது

பறக்கும் பட்டாம் பூச்சியின் நிழல்
தரையில் நடைப் பழகுகிறது

பனிக்காட்டில் எரியும் நெருப்பு
குளிரில் நடுங்கியபடி ஆடுகிறது

நின்றுக் களைத்த மரங்கள்
நிழலாக நிலத்தில் உறங்கி ஓய்வெடுக்கிறது

வான் தவழும் நிலவு
நீர் கண்டு நீச்சல் பழகுகிறது

இப்படித்தான்,
அன்பின் நினைவுகள் 
அனைத்தையும் அனைவரையும்
எப்போதும் ஒருபடி மேல்
பதிந்து வைத்திருக்கும்

பனி படர்ந்த போதிலும்
நினைவில் அன்பின் பெரு வெளிச்சம்
ஒருபோதும் மங்குவதில்லை

Saturday, November 30, 2024

நிலந்தொடும் மழை


உனது கருணையைப் போல்
ஈரம் கசிகிற ஒரு மழை நாளில்
உனக்காகக் கடற்கரையோரக் 
குளம்பிக் கடையில் குழம்பியிருந்தேன் 

மண் சேர முயன்று தோற்றுப் போன மழை
ஏன் நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது ?
மழை குடித்த கடல்
ஏன் எப்போதும் போதையில் தள்ளாடுகிறது ?
மழையைப் பார்த்து நீ 
எப்போதும் கேட்கும் கேள்விகள்
மனதில் உன் நினைவோடு 
விளையாடிக் கொண்டிருந்தது

நீ வரும் முன்பே நமக்கான மேஜையில்
எதிரெதிரே அமர்ந்த தேநீர்
கோப்பையிலிருந்து ஆவியாகிப் போய்
ஒன்றை ஒன்று கட்டித் தழுவி கொண்டிருந்தது

கலவரப் புயலோடு வந்த நீ
என் எதிரே அமர்ந்தாய் 
கையில் ஒரு கூரிய வாளோடு

உன் கண்களிலிருந்து 
தற்கொலை செய்யத் தொடங்கியது மழை
தடுக்க முயன்ற
என் கைகள் தட்டி விட்டு
வாள் வீசி சென்றாய்

அன்பின் நிலம் தொட்ட
அந்த மழைத்துளியை 
பின் தொடர்ந்து சேர்ந்து கலந்தது
வடியும் குருதி

அப்போது அங்கே
 பூக்கத் தொடங்கியது
ஓர் அலரிப்பூ