Sunday, October 13, 2013

தூங்கா நினைவுகள் ..



சில நினைவுகள் மட்டும் 
வேண்டாதவையாக 
தீண்டாதவையாக 
இருந்தும் 
அடிக்கடி 
வந்து போகிறது 
சுகமாக ..


சில 
சொல்வதுமில்லை 
வெல்வதுமில்லை 
ஆனாலும் 
மனதை விட்டு 
விலகுவதுமில்லை ..

சில 
பார்வையிலே 
புன்னகை கோர்வையிலே 
மட்டும் இருந்திருக்கும் ..
ஆயினும் 
கண்மூடும் வரை 
உள்ளிருக்கும் ..

காரணமில்லை 
காரியமில்லை 
பருவத்தில் 
உருவான புயலால் 
உண்டான சேதத்தின் 
மிச்சம்..

தனிமையில் 
விழிக்கும் 
இரவினில் 
முழிக்கும் 
கனவினில் 
ரசிக்கும் ..

முதற்பதியம் 
போட்ட நிலமாய் 
அதன் பயிராய் 
அதன் நினைவுகள் 
பசுமையாய்   ..

இறுதியாய் 
கண்மூடும் போது 
இது தூங்கும் ..
வாழ்கை முழுதும் 
இதன் பாரம் தாங்கும் ..

தாய்க்கு 
தலைமகனாய் 
இந்த நினைவுகள் 
ஒவ்வொருவருக்கும் ..




Monday, October 7, 2013

தனிமை..!





அந்த வீட்டின்
முற்புறத்தில் இருக்கும்
ஊஞ்சலில் உறவாட யாரும் இல்லை ,
தினமும் காற்று வந்து
ஊஞ்சலில் உறவாடிச் செல்கிறது ...

Sunday, June 30, 2013

சோம்பல்- நீ என் காதலி...!










சோம்பல்
நான் விரும்பி அணைக்கும் காதலி ..

உனை முதல்முதலில் எங்குசந்தித்தேன் ,
கருவறையில் விழிப்புக்கு ஓய்வுக் கொடுத்தபோதா ?

சொல்லப்போனால்
என் முதல் காதலும் நீ தான்
இன்றுவரை என்னோடு இருக்கும் ஒரே காதலி நீ தான் ..

எப்போது என நினைவில்லை ,
எப்போதும் என் நினைவில் இல்லாமல் இல்லை ..

என் வளர்ச்சிக்குத் தடையாக நின்றாய் ,
என் முயற்சிக்கு குறுக்காய் நின்றாய் ,
என் பெற்றோர் கோபம் கொள்ளக் காரணமாக இருந்தாய்
ஆயினும் உன் மீது
சிறிதும் கோபம் வந்ததில்லை ,
என் காதலும் குறையவில்லை ....

பல நேரம் உனைக் கட்டி அணைத்தப்படியே
கட்டிலில் உறங்கி இருக்கிறேன் ..
உனை சிந்தித்தபடியே
எங்கும் கிறங்கிஇருக்கிறேன் ..
உனை வெறுக்கும் அத்தனை
முயற்சியிலும் தோற்றிருக்கிறேன் ..
அதிகாலை விழிப்பில்
முதலில்
நினைவில் நீதான் ..
இரவில்
உறக்கம் வருகையில்
முதலில் நீதான் ..


யார் வெறுத்தாலும்
யார் மறுத்தாலும்
என்னுள்
என் சிந்தையுள் இரண்டறக் கலந்த
சோம்பல்- நீ என் காதலி ...

Monday, June 24, 2013

மழை...!




மழையில் நனைந்தபடி
என் வீட்டு
ஜன்னல் கண்ணாடி வடிக்கிறது
ஆனந்தக் கண்ணீர் ..

Saturday, June 1, 2013

வீழாதே ..!







கண்ணீர் வற்றிப்போகும்
புன்னகை வற்றாது ..

துக்கம் கடந்து போகும்
வாழ்க்கை முடியாது ..

கண்ணீர் விழும்
கண்கள் விழாது ..

முயற்சியில் தோற்கலாம்
முயற்சி தோற்காது ...

அன்பு ஏமாற்றப்படலாம்
அன்பு ஏமாற்றாது ..

பகலும் முடியும்
இரவும் விடியும் ...

தோல்வியும் உரமாகும்
வெற்றியின் விதைக்கு ..

வெற்றியை வளர்க்க
தீ மூட்டு சோம்பலின் சிதைக்கு ..

வெளிச்சம் சுகம் காண
சிறிது இருளும் வேண்டும் ..

கனவின் முகம் காண
இரவும் வேண்டும் ..

இரவு விடியாமல்
முடியாது ..!



Friday, May 31, 2013

உணர்ச்சிக் கண்ணாடி







மௌனமாய்ப் பேசும் மொழி
அமைதியாய் இருக்கும் கோபம் 
கண்ணீராய் உருண்டோடும் மகிழ்ச்சி  
சிரிப்பாய்ச் சிதறும் சோகம்  
வெறுப்பாய் வெளிரும் அன்பு  
காதலாய் ஒளிரும்  நட்பு 
காமமாய் சிதறும் காதல் 

காட்சிகளை நேராகக் காட்டும்
தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட
கண்ணாடியாய், 
சில நேரங்களில் 
சில உணர்சிகள்...

Saturday, May 11, 2013

மணல் ...!





நிதிகள்
கற்களைச் சலவை செய்ததில்
அழுக்காய் வந்தன
மணல் ...!