கடல் அலைகள்
கால் தொடும் போதெல்லாம்
ஏனோ யாரையேனும்
மன்னிக்கத் தோன்றுகிறது ..
அன்பின் சுவை பழகிய மனம்,
அது வளர்ப்புப் பிராணியின் நாக்கு
அதன் கனவெல்லாம் தன் எஜமானை வருடி விடுவது
அது கடல் அலை
அது செய்வதெல்லாம் விடாமல் ஏதோ ஒன்றைத் தேடுவது
அது மானின் வாய்
அது வேண்டுவதெல்லாம் எப்போதும் அசைபோட ஏதோ ஒன்று
அது மீனின் கண்கள்
அதன் ஆசையெல்லாம் இமைகளற்று எப்போதும் பார்த்திருப்பது
அது நிறைக்க முடியா கிணறு
அதன் தேவையெல்லாம் உள்ளூற ஏற்பது
அது கங்காருவின் மடிப்பை
அதன் வேலையெல்லாம் பாரம் சுமப்பது
அது சிசுவின் பசி
அதற்குப் பார்ப்பதெல்லாம் பால் சுரக்கும் காம்பு ..
சிறு மழை போதும்
உன் நினைவு துளிர் விட
உனைத் தீண்டி அனைத்திட ...
முகம் மோதும் மழையில் உன் முத்தம்
தரை மோதும் மழையில் உன் சத்தம்
புயல் மழையில் உன் கோபம்
மண் நனைத்த முதல் மழையில் உன் வாசம்
அதிகாலை தூறலில் உன் பூமுகம்
பொன்மாலைச் சாரலில் உன் சிநேகம்
உடல் நனைத்த மழையில் உன் தழுவல்
ஆலங்கட்டி மழையில் உன் செல்ல அடி
இப்படி ஒவ்வொரு மழையிலும்
அதன் ஒவ்வொரு துளியிலும்
நீயே இருக்கிறாய்
என் நெஞ்சை நனைக்கிறாய்
எதிர்ப்படும் ஊர்திகள் கடந்து போகிறது
சிலநேரம் அதன் பெருவெளிச்சம்
கண்களைக் குருடாக்குகிறது
கடலை வெறித்துப் பார்க்கும்
மீனின் கண்களில் தெரியும் பிரார்த்தனை
புயலில் கிளையின் விளிம்பில்
ஊஞ்சலாடும் இலையின் பிரார்த்தனை
தாயின் கருவறை பிரிகையில்
கண்ணீர் சிந்தா சிசுவின் அழுகையில் கேட்கும் பிரார்த்தனை
இறுதிச் சந்திப்பின்
கடைசி முத்தத்தில் பிரியும்
இதழ்களின் பிரார்த்தனை
புத்துணர்ச்சி முகாமிலிருந்து
மீண்டும் பயணப்படச் சுமை ஊர்தி ஏறும்
கோவில் யானையின் பிரார்த்தனை
மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில்
மருத்துவரின் இறுதி வார்த்தைக்குக் காத்திருக்கும்
உறவுகளின் பிரார்த்தனை
இத்தனை பிரார்த்தனைகளிலும்
வேண்டப்படுகிறது பிரியாத வரம்
குன்றின் பாறைகளைப் பிரித்துச் செய்யப்பட்ட
கடவுள் சிலைகள் முன் வைக்கப்படும்
பிரார்த்தனைகள் கேட்டு
கடவுளும் குழம்பிப் போகிறார் !
அம்மா போடும் தேநீருக்கு
குடும்பமே அடிமை அம்மாவைத் தவிர ..
அம்மாவின் தேநீர்ச் சுவைக்கு நிகரில்லாததால்,
வெளியிடங்கள் சென்றால்
அனைவரும் காபி மட்டுமே ..
எங்கும் அம்மா தேநீர் காபி அருந்தி
நாங்கள் பார்த்ததில்லை
அப்பா தவறிய பின்னர்
முதலாம் ஆண்டுக் காரியம் முடித்து
வந்திறங்கிய பேருந்து நிலையத்தில்,
அம்மா முதல் முறையாக
"ஒரு தேநீர் வாங்கிக் குடு" என்றார்.
அம்மா ஊதிக் குடித்த
அந்தக் கனவுத் தேநீரில்
அப்பா ஆவியாகிப்
போய்க் கொண்டிருந்தார்
எரியும் பனிக்காட்டில்
மாண்ட அடிமைகளின்
குருதியின் வாசத்தை
தாங்கள் ருசித்த தேநீரில்
முகர மறுத்தார்கள்
ஆண்டைகளும் ஆங்கிலேயர்களும் ..
ஆண்டுகள் ஓடியும் ஆட்சிகள் மாறியும்
அந்தக் குருதியின் வாசத்தை
யாரும் முகர்ந்ததாகத் தெரியவில்லை ..
ஊதிய உயர்வுப் போராட்டம் முடித்த கையோடு
தேயிலைத் தோட்டக் கூலிகள்
சாலையோரக் கடைகளில்
தேநீர் அருந்தினார்கள்
தேநீர் குடித்தவர்களில்
சிலருக்குக் குருதியின் சுவை
தெரியத் தொடங்கியது கனவில் ..