Saturday, March 17, 2012

இமைக்க மறந்த விழிகள் ...!




அந்தக் காட்சி ,
கடந்து போன ஒரு நொடியில்
என் இமை பிடித்து நிறுத்தி விட்டது ..
பதியம் போட்ட நெல்மணியாய்
நெஞ்சில் பதிந்து விட்டது ..

அந்த அழகை
என்ன வென்று சொல்ல ...
அழகுக்கு உவமைச் சொல்லும்
அழகு அது ..
எந்தக் கல் நெஞ்சும்
அதைக் கண்டால்
இலகும் அதில் ..

என் விழிக்குள் இருக்கும்
கருமணிகளும் சிறு குழந்தையென
துள்ளி விளையாடியது
அந்த அழகை ரசிக்கையில் ...

கருப்புக் கல் பதிந்த வெள்ளி
மோதிரமாய்க் கண்கள் ..!
பூவின் புன்முறுவலாய்
மெல்லிய சிர்ரிப்பு ...!
காற்றின் சொல் கேட்கும்
பூவாய்த் தலை யாட்டு ..!
கோபம் காட்டிச் சிவக்கும்
அழகிய மூக்கு ..!
பூச்சூடும் பூவாய்
அவள் அணிந்தப் பூ ..!
காற்றில் ஓவியம்
வரையும் அழகிய விரல்கள் ...!
சிரிப்பாய் இசைத்து வரும்
காம்போதி ராகம் ..!

இப்படி
இமைக்க மறந்த விழிகள்
அனைத்தையும் மறந்தன
அந்தக் குழந்தையின் புன்சிரிப்பை
ரசிக்கையில் ...!

Wednesday, March 14, 2012

இரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...!





குற்றம் யார் செய்தாலும்
தண்டனை உண்டா ?
இல்லை அரசியல் என்று வந்து விட்டால்
குற்றத்தின் தண்டனைக்குத் தான் தண்டனையா ?

உன் கண் முன்னே
உன் உறவுகளை இழந்து இருக்கிறாயா ?
எங்கள் வலி தெரியும் ...
செல்லடிப் பட்டு வெந்துப் போய்
கை கால்கள் இழந்து இருக்கிறாயா ?
எங்கள் ரணம் புரியும் ...
அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில்
குண்டு மழைப் பொழிந்திருக்கிறதா ?
உந்தன் மனமும் வலியில் அழும் ...
பிஞ்சு பிள்ளை பசியால்
பல நாள் அழுது இருகிறதா ?
உன் கல் மனமும் கரையும் ...
சிறு பிள்ளை நெற்றிப் பொட்டில்
துப்பாக்கி வைத்துக் கொல்லப் பட்டிருக்கிறதா ?
பெண்களின் கொடுமைகளை
வார்த்தைகளில் வடிக்கையில்
எழுத்துகளும் கண்ணீர் சிந்துகின்றது ...

மனித நேயம் அற்ற
இத்தனை செயல்களும்
புத்தன் செய்யச் சொல்ல வில்லை ...
அத்தனையும் புத்த தேசத்தில் நடந்தது ...
அத்தனை இரத்த உறவுகளுக்கும் ,
கை எட்டும் தூரம் இருந்தும்
இரதம் சிந்துவதைக் கண்டு
கை பிசைந்து கிடந்தது ...

இனியும்
எங்கள் கண்ணீரை
நீங்கள் துடைக்க வேண்டாம் ...
எங்கள் கண்ணீரைத் துடைக்க வரும் மற்ற கரங்களையும்
நீங்கள் உடைக்க வேண்டாம்...!



Friday, March 9, 2012

நான் எழுதும் கவிதை உனக்குப் புரியாது ...!







நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்குப் புரியாது 

என் மனக்கண்ணாடியை
அணிந்து பார்த்தாலும் தெரியாதுஎன் மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதைப் படம் பிடித்து
கவிதையாய்ப் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா ?
எனது கவிதை புரியுமா ?

என் கவிதை புரியாததால்
நான் வருத்தப்பட முடியாது ...

என் வருத்தங்களை
கவிதையாய்ப் படைக்கையில்
அதுவும் பிறர்க்குப் புரியவில்லையென
வருத்தப்பட மாட்டேன் ...

என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளைச் சேர்த்து
கவிதை தூரலாய்த் தூவுகிறேன் ...

அந்தத் தூறலில்
நனைவது
உனக்குப் பிடிக்கவில்லை என்பதால்
எனது கவிதை தூறல் நின்று விடாது ...

என்ன செய்வது ,
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகம் போல 
சில நேரம் எனது கவிதை...

மீண்டும் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதை
நிச்சயம் உனக்குப் புரியாது ...

Friday, February 24, 2012

வேண்டும்..!வேண்டாம்...!





தூங்காத இரவுகள் வேண்டும்
விடியாத இரவுகள் வேண்டாம்
களையாத கனவுகள் வேண்டும்
மாறாத கனவுகள் வேண்டாம்

உதிராத பூக்கள் வேண்டும்
வாசமில்லா பூக்கள் வேண்டாம்
சாய்க்காத புயல் வேண்டும்
வீசாத தென்றல் வேண்டாம்

களையாத மேகம் வேண்டும்
தூராத மேகம் வேண்டாம்
தாலாட்டும் பாடல் வேண்டும்
செவி பிய்க்கும் பாடல் வேண்டாம்

கருணைக் கொண்ட கண்கள் வேண்டும்
கலங்கும் கண்கள் வேண்டாம்
ஆறுதல் தரும் வார்த்தை வேண்டும்
காயம் தரும் வார்த்தை வேண்டாம்

நிழல் தரும் மரமாக மனது வேண்டும்
மரம் உதிரும் சருகாக மனம் வேண்டாம்
விடையாக வாழ்க்கை வேண்டும்
புதிராக வாழ்க்கை வேண்டாம்

பிறரை நேசிக்கும் பக்தி வேண்டும்
தன்னை மறக்கும் பக்தி வேண்டாம்
மனிதர்களாக மனிதர்கள் வேண்டும்
பொய்யாக மனிதர்கள் வேண்டாம்

மாசற்ற அன்பு வேண்டும்
பற்றற்ற அன்பு வேண்டாம்
நினையாத நினைவுகள் வேண்டும்
வலியாக நினைவுகள் வேண்டாம்

பிரியாத உறவுகள் வேண்டும்
உயிரற்ற உறவுகள் வேண்டாம்
வேண்டாதவையும் சில நேரம் வேண்டும்
வேண்டுபவையும் சில நேரம் வேண்டாம்

Sunday, January 29, 2012

ஒரே பார்வையும் ஒரே ஒரு புன்னகையும் ..!






ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை ஜாலங்கள் செய்கிறது ...

பல்வேறு சூழ்நிலைகளில்
பல்வேறு தருணங்களில்
பல்வேறு காலங்களில்
எத்தனை உணர்ச்சிகளுக்கு
தாயாகிறது ...

முதல் பார்வையில் ,
மயக்கம் 
பரவசம் 
வெட்கம் 
தயக்கம் 
வியப்பு  சந்திப்பு ...

ஒவ்வொரு சந்திப்பிலும் ,
பூரிப்பு 
சிரிப்பு 
மகிழ்ச்சி 
ஆறுதல் 
ஆசை  ...

ஒவ்வொரு ஆசையிலும்  ,
மோகம் 
தாகம் 
காமம் தணியாத காதல்  ...

ஒவ்வொரு காதலிலும்  ,அன்பு மகிழ்ச்சி
உடைமையுணர்வு 
பயம்
ஊடல்  ...

ஒவ்வொரு ஊடலிலும் ,
கோபம் 
சோகம் 
திகைப்பு 
மோதல் கூடல்  ...

ஒவ்வொரு கூடலிலும்,இன்பம்
உச்சம்
களிப்பு
 மகிழ் மிகு கண்ணீர் முன்னம்  விட
அதிகக் காதல்  ..

இறுதிச் சந்திப்பில் ,
அதிர்ச்சி 
திகைப்பு 
காயம் 
தனிமை  ...

தனிமையில்,
சிரிப்பு 
சோகம் 
வலி  மிகு கண்ணீர் 
வெறுமை  நினைவுகள் ...

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள்  ...!

Friday, January 27, 2012

அலைகளின் பேச்சு






கரை தொட்டு
பின் செல்லும் அலைகள் 
எதோ ஒன்றை
கரையில் 
நுரையாய் எழுதிச் செல்கிறது ..

எழுதிச் செல்லும் பொழுது
ஏதோ ஒன்றை கரையிடம்
சத்தமாகச் சொல்லி விட்டுச்  செல்கிறது ..

அந்த
அலைகளின் எழுத்துக்களை
படித்துவிட முயற்சிக்கிறேன் ..
புரியவில்லை ...

அந்த
அலைகளின் சத்தத்தைக் கேட்டு
அதன் மொழியை
புரிந்து விட முயற்சிகிறேன்
விளங்கவில்லை ..

தரையாக இல்லாததால்
என்னவோ
அதை
படிக்கவோ
கேட்கவோ முடியவில்லை ..

முயன்றுப் படிக்கும் பொழுதுகளில் 
அந்த எழுத்துக்கள் யாவும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு அர்த்தம் தருகிறது

ஒவ்வொரு முறை
அந்தப் பேச்சைக் கேட்கும் பொழுதும்
அது வெவ்வேறாக ஒலிக்கிறது ...

சிறிதாய் எழுத்துக்கள்
புரிந்த வேளையில்
அலைகள் வந்து அதை அழித்துவிட்டு
புதிதாக எழுதிச் செல்கிறது ...

சற்று 
புரியும் பொழுது 
அது தன் பேச்சை
நிறுத்திக் கொள்கிறது  ...

கடைசிவரை அலைகளின்
பேச்சும் எழுத்தும்
புரியவில்லை ..

உலகிலிருக்கும் பல்வேறு
புரியாத மர்மங்கள் போல்
இந்த
பேச்சும் எழுத்தும்
மர்மமாகவே உள்ளது ...!

Monday, January 2, 2012

மௌனத்தின் சத்தங்கள் ...!







மௌனம் சத்தம் போடுமா ?
சற்று மௌனமாகச் சிந்தித்ததில்
அது ஆம் என்றது சத்தமாக ..

என்னை விட்டுப் போய்விடுவாயா ?
எனக் காதலியிடம் கேட்டக் கேள்விக்கு
பதிலாய் வந்த மௌனம்இன்றும் மனதில் சத்தம் போடுகிறது ...

எம் இன மக்கள்
எட்டிய தூரத்தில் இருந்தும்
கொத்து கொத்தாய்ச் சாகையில்
இங்கு அமைதி காத்த மக்களின் மௌனம்
ஈழத்தில் குழந்தையின் அழுகையாய்க் கேட்கிறது ..

பேச வேண்டிய தருணங்களில்
நான் காத்த மௌனங்களே
இன்று வரை நினைவில் சத்தம் போடுகிறது ..

நான் திட்டிப் போன வேளையில்
மௌனம் காத்த தந்தையின் மௌனங்கள்
என்னைச் சத்தமாகக் குத்திக் காட்டுகிறது ..

உயிரெனக் கலந்த உறவுகள்
உயிரற்றச் சவமாகக் கிடக்கையில்
என்னில் கண்ணீராய்ச் சத்தம் போடுகிறது ..
இப்பொழுது சொல்லுங்கள்
மௌனம் சத்தம் போடும் தானே ..