Saturday, November 1, 2025

நதியில் விளையாடி ...!

 



நதியில் விளையாடிய காட்சி,


ஒரு கருவாட்டின் கண்ணில்

கடைசி நினைவாகப்

பொதிந்திருக்கலாம்


மேகத்திலிருந்து நதியின்

காய்ந்த மடியில் விழுந்து

மணலில் புதைந்து மடிந்த

மழைத்துளி 

இறுதியாகத் தேடியிருக்கலாம்


பால் சுரக்காத மார்பைப் போல

நீரில்லா நதியை விடாமல் அறுக்கும்

மணல் லாரி

தன் கிளீனர் இங்கே

என்றோ குளிப்பாட்டிய நினைவில்

ஒரு நொடி வந்திருக்கலாம்


ஏரிக்கரையோர அடுக்குமாடிக்குடியிருப்புச் 

சுவரில் உறங்கிக் கொண்டிருக்கும் மணல்

ஏரிக்கரை நீர்ச் சலசலக்கும்

சத்தம் கேட்டு ஏங்கியிருக்கலாம்


இரவில் தன் முகம் பார்க்கும்

நீண்டக் கண்ணாடியைத் 

தேடுகையில் நினைத்திருக்கலாம்


சேய்க் காணாத தாய் போல

முகத்துவாரத்தில் அலையும்

கடலின் தேடலிலிருக்கலாம்


நாகரீகத் தொட்டில் தந்து வளர்த்தத் தாயை

வளர்ச்சியெனக் காரணம் தந்து

மனிதன் இன்று மறந்தது ஏனோ

Sunday, October 26, 2025

தீபங்கள் பேசும்

 




மேய்ப்பரைத் தேடிக் கொண்டு அலைவது
ஆட்டு மந்தைகளின்
ஆதி காலத்துக் குணம்

புது மேய்ப்பன் கையில்
கவர்ச்சிப் புற்கள் கண்டால்
மந்தைகள்
புது மேய்ப்பன் தேடி ஓடும் 

குடிமை உணர்வற்ற
சுயநலமிக்க
மந்தைகளுக்கு
எந்த மேய்ப்பனும்
ஆடுகள் வளர்ப்பது
கசாப்புக்கு 
என்ற உண்மை புரிவதில்லை

பால் குடிக்கும் குட்டிகளுக்கு
கவர்ச்சிப் புற்கள் 
எதற்கு என யோசிப்பதுமில்லை

உயிர்களின் மதிப்பையே
உணராத தேசத்தில்
ஓட்டுக்களின்
மதிப்பும் உணரப்போவதில்லை

குழந்தைகளின் படங்கள்
முன் ஏற்றப்படும் தீபங்கள் போல 
எதுவும் ஒரு குடும்பத்தை
இருட்டடிப்புச் செய்வதில்லை

பிணம் கண்டு உயிர்த்தெழுந்த
அரசியல் திண்ணிகள் கண்டு
அஞ்சிய அந்தத் தீபங்கள் 
நடுங்கிய படி
காற்றில் மூச்சுத் தினறி
ஏதோ பேசுகிறது

Tuesday, October 14, 2025

அன்பின் அருவம்

 


கருவில் இருக்கும் சிசு

கானும் கனவு போலச் சில அன்பு

யாருக்கும் நினைவில் இருக்காது

அந்தச் சிசு உட்பட

Monday, October 13, 2025

தலைப் பிரசவம்





முதல் முறையாக 

மரத்தில் 

கட்டப் படும் கூடு

மரத்தின் 

தலைப் பிரசவம் 

Saturday, October 11, 2025

எரியும் இரவுகள்


சாவற்ற சாபம் பெற்ற நினைவுகள்

கருவுற்றுப் பிரசவிக்கும் போதெல்லாம்

கனவில் வரும்  ஒரு பட்டாம்பூச்சி

பறக்க முடியாமல்

நடந்து போகிறது 


விருப்பமான நிறைவேறாத ஆசைகள்

பாலைவனப் புயலில்

புழுதி படிந்தபடி நடக்கையில்

அங்குத் தெரிந்த கானல் நீரை

தன் தாகம் தீர்க்கும்

என்ற நம்பிக்கையில் குடிக்கிறது 


சவப்பெட்டியில் அடக்கமான உணர்வுகள்

முகப்புத்தகத்தில் இறந்து போனவரின்

நேர்க்கோட்டில் எழுதப்பட்ட

பிறந்தநாள் வாழ்த்தின்

அர்த்தம் புரிய முயற்சிக்கிறது


அழகிய பிரமையில் மயங்கியிருக்கும்

குழந்தையின் ஆடல் போலக்

காற்றில் பறந்தபடி ஆடுகிறது

உன் பெயர் எழுதப்பட்ட காகிதம்

எரியும் இரவுகளின் வெளிச்சத்தில்

மீண்டும் ஒரு முறை

பின் தொடர்ந்து

படிக்க முயற்சிக்கிறேன் 

Sunday, September 14, 2025

தேடல்

 




தன் ஆயுள் முழுக்க

வானத்தை அளக்க எண்ணி

தோற்றுப் போகிறது

பறவை 

Saturday, August 23, 2025

அன்பை விளக்கும் சொல்



அன்பின் பிரசவம்
எப்பொழுதும் நிகழும் 
 
கருவில் இருக்கும் சிசு
காணும் கனவில்

பிறந்த குழந்தைக்கு
பசி அமர்த்தும் முலையில்

கண்ணீர்த் துளிர்க்கும் முகம் கண்டு
கட்டி அணைத்து குழந்தை தரும் முத்தத்தில்

ஊடலை உடைத்தெறிய பேசாமல் மேசைமேல்
வைக்கப்பட்ட ஒரு தேநீர்க் கோப்பையில்  

இறுதிச் சந்திப்பின் கடைசி முத்தத்தில்
பிரிவின் சுவைக்  கூட்டிய கண்ணீரில்  

இறந்தவரின் கைபேசி எண்ணை
அழிக்கும் போது கைகளின் நடுக்கத்தில்  

தன் எஜமானுக்காக இரயில் நிலையத்தில்
ஆயுள் முழுதும் காத்திருந்த நாயின் கண்களில்

இப்படியாக 
அன்பை விளக்கச் சொற்கள் தேவை இல்லை
சொல்லித்தான் புரியுமெனில் அங்கு அன்பு இல்லை  .. 

Sunday, August 17, 2025

குழந்தையும் பலூனும் 

 



குழந்தையின் கை பிடித்த மகிழ்ச்சியில்

காற்றில் பறந்த படி

துள்ளி குதிக்கத் தொடங்குகிறது பலூன் 


பலூனில் நிரப்புப்பட்டிருக்கும்

மூச்சுக்காற்றால் மீண்டும் உயிர்ப்பெற்றது

குழந்தையின் மகிழ்ச்சி 


அந்தவீட்டின் கறி சோற்றின் 

வாசம் பிடித்த பலூன்

அடுப்படி பக்கம் திரும்பியது

குழந்தையும் பின்தொடர்ந்து


கொதிக்கும் குழம்பை

ருசிபார்க்க எண்ணி

குழம்புச் சட்டியின் அருகில் சென்று

தன் ஆயுளை முடித்துக்கொண்டது 


குழந்தைகள் இந்தப் பூமியில்

சந்திக்கும் முதல் வன்முறை

பலூன் வெடித்துச் சிதறுவது

Sunday, August 10, 2025

மழை ரொம்பப் பிடிக்கும்

 



மழைப் பொழியும் ஒரு மாலை ,
ஜன்னல் வழியே மழை என்னை
ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது

கையில் தேநீர்க் கோப்பை
அதில் இறந்து போன நினைவுகள்
ஆவியாகிப் பறந்துப் போய்க் கொண்டிருந்தது 

கையோடு என் கைபேசி 
அதில் நீ அனுப்பிய பழைய குறுஞ்செய்தி ,
வந்து வந்து போனது பொய்பேசி 

காதோரம் மெல்லிய பாடல்
கண்மூடி நிற்கையில் ஏதோ தேடல்
தேடல் முடிவில் கண்ணோடு அழகாய் வந்தாய்
நினைவோடு என்னைப்
பல காலம் கடந்து கடத்திச் சென்றாய் 

மீண்டும் நாம் 
அதே மாலை வேலை 
அதே ரயில்வே சாலை 
மழைத் தூறும் நடைபாதையில்
நீ எந்தன் கைப் பிடித்துக் கொண்டாய்
தண்டவாளம் பிடித்து நடக்கும்
ரயில் போல் நான் உனைப் பிடித்துக்கொண்டேன்

மழை வேகம் பிடிக்க,
நாம் குடை பிடிக்க ,
காற்று நம் மீது சாரல் தெறிக்க 
வேகம் பிடித்த காற்றோடு
குடை கொண்டு சண்டையிட்டுத்
தோற்றுப்போணோம்

மழையில் நனைந்தோம் ,
காதல் மழையில்‌ கரைந்தோம்
காலம் கடந்தது ,
கண்ணீர் மழையில்
காதல் கரைந்தது
 
ஜன்னல் கண்ணாடியின் வியர்வையில் 
உன் பெயரை எழுதி வைத்தேன் 
மழை வந்து உன்னைக் களவாடிச் சென்றது 
என்றோ மழையென்றால்
ரொம்பப் பிடிக்கும் என
நீ சொன்ன ஞாபகம் ...

Saturday, August 2, 2025

அயல் மகரந்தச் சேர்க்கை

 




கூதிர் காலக் காலையில் மலர்ந்து

கடவுள் சேரும்

கருவறைப் பூ ஒன்று


மலத்தை உரமாய்ச் செரித்துப்

புதராய் மலரும்

கல்லறைப் பூ ஒன்று


அங்கு வந்த ஒரு

வண்டால் நிகழ்ந்தது

அயல் மகரந்தச் சேர்க்கை


அன்பால் விளைந்து

சாதியற்று புதியதோர் வகையாய்

புதிதாய்ப் பூக்கத்தொடங்கியது

ஒரு மொட்டு


புதியதோர் மொட்டு

மலரக் கண்டு சினம் கொண்ட

காவல் கூட்டம்

கல்லறைக் காட்டைக் கொளுத்தியது


தீட்டெனச் சொல்லப்பட்ட

புதியதோர்

மொட்டை கருவறுத்து

பூவைத் தீயில் பொசுக்கியது


தீயில் கருகியப்

பூக்களின் சாம்பல்

காற்றில் பறந்தபடி

தனது காதலைத் தேடத் தொடங்கியது


மீண்டும் ஒரு வண்டு

பூக்களைத் தேடிப் பறந்தபடி

புதியதோர் அயல் மகரந்தச்

சேர்க்கைக்குத் தயாரானது

Friday, July 11, 2025

மகனதிகாரம்



மகனே நீ பிறக்கையில் 

உன் அழுகை‌‌க்குப் பிறந்தது என் சிரிப்பு ...


உன்னைக் கைகளில் ஏந்திய முதல் தருணம்

என் உலகமே எந்தன் கைகளுக்குள் அடங்கியது ...


நீ என் விரல் பற்றிக் கொண்டு உறங்கினாய்

நம்பிக்கை என்னுள் விழித்துக் கொண்டது ...


உன் பிஞ்சுப் பாதங்கள் என் முகத்தை உதைக்கையில்

கடவுள் என்னை ஆசீர்வதிக்கத் தொடங்கினார் ...


உன் கோபங்கள் முன் மண்டியிட வைத்து விடுகிறாய்

நான் என்னும் அகங்காரத்தையும்


உன்னோடு கண்ணாமூச்சி விளையாடுகையில்

என் கவலைகளும் மறைந்து ஒளிந்து கொள்கிறது


உன்னோடு பருப்பு கடைந்து விளையாடுகையில்

உண்ணாமல் வயிறு நிரம்புகிறது 


உறக்கம் கலையாமல் உன்னை முத்தமிட முயன்று

ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறேன்

சில வரிகளில் உன்னை எழுத முயலும் இந்தக் கவிதைப் போல் ...


Friday, July 4, 2025

பெண்மையும் கவிதையும்

                         


அகமும் பேசும்

புறமும் பேசும் 

அழகாய் பொய் பேசும்

கேட்க கேட்க மயக்கும்

கேட்பவரே ரசிக்கும்படி குத்திக் காட்டும்

அடி அடியாய் எடுத்து வைத்து சீராய் அசையும்


கருவாவது ஓர் இடத்தில்

வாழ்வாங்கு வாழ்வது வேறு இடத்தில்

குழந்தையாக ஹைக்கூ

குமரியாகக் காதல் கவிதை

தோழியாகப் புதுக்கவிதை

மனைவியாக எதிர் கவிதை

தாயாக மரபுக்கவிதை 


சில நேரம்

எத்தனை முறை படித்தாலும் புரிவதில்லை..

அப்பா


உலகில் அதிகம் எழுதப்படாத கவிதை

சரியாகப் புரிந்து கொள்ளப்படாத கவிதையும் கூட


பிள்ளையின் முதல் அழுகைக்கு

பிறக்கிறார் அப்பா


அப்பாவின் கைகள் பற்றிக் கொள்ளும் தருணம்

நம்பிக்கையும் பற்றிக்கொள்ளும்


அம்மாவின் நிழலில் நம்மை இளைப்பாற விட்டு

சூரியனை அணைத்துக் கொள்ளும் பெரு வெளிச்சம்


கத்தரித்துக்கொள்ள இயலாத பேரன்பின் தொப்புள் கொடியை

யாருக்கும் தெரிய வண்ணம் உள்ளுக்குள்ளே வைத்திருப்பார்


நம் கண்ணீர்த் துளிகள் துடைத்தெறியும் விருப்பமான கைக்குட்டை

கனவிலும் வந்து விருப்ப உணவு ஊட்டி விட்ட மாய வித்தைக்காரர்


என்னில் இருக்கும் அத்தனையும் உன்னிலிருந்து வந்தது

இடியுடன் கூடிய மழையாய் கண்டிப்புடன் அன்பு நீ தந்தது


அப்பாவின் செருப்பு நாம் அணியும் வரை

அந்தக் கால்களின் வலி புரிவதில்லை

Saturday, March 29, 2025

காலமும் காதலும்

 


கண்களுக்குள் சிறைப்பட்டு வாழும்
யாரும் பார்க்காத கண்நீர்த்துளியை போல
நாம் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில்
காலமும் காதலும் சிக்கிக் கிடக்கிறது
அதைப் பார்த்த நொடியில்
காலம் விடுதலையாகிறது

மறந்துபோன கல்லறை மேட்டின் மேல் கட்டப்பட்ட
யாரும் வாழாத புதிய வீட்டில் உறங்கும் பூனையைப் போல
நாம் பேசிய உரையாடல்கள் புதைந்திருக்கும் கைபேசியில்
காலமும் காதலும் உறங்கிக் கிடக்கிறது
அதைப் படித்த நொடியில்
காலம் விழித்துக் கொள்கிறது

கடலில் இருக்கும் மீன் மழையில் நனையும் ஆசையில்
மேலே குதிக்கும் பொழுதினில்
அலை மேலெழும்பி மீண்டும் கடலுள் இழுத்துச் செல்லப் பார்க்கும்
காதலில் காலம் அப்படியே



Saturday, February 15, 2025

நட்சத்திரங்களின் வருகை

 




சூரியனாக இருந்த உன் அன்பின் வெளிச்சம்

நிலவாக என்னை வாழ வைத்தது

ஒரே வானில் என்றும் சேர முடியாத நமது பெருவாழ்வு

கிரகணத்தின் சில கணத்தில் மட்டும் விதிவிலக்கு


திடீரென மெல்ல மெல்ல விட்டு விலகி

தொலைதூர நட்சத்திரமானாய்

பின்பு ஒரு நாள் மின்சார வெளிச்சத்தில் தொலைந்தும் போனாய்

இந்த வெளிச்சம் மட்டும் ஏன் என் வாழ்வை இருட்டடித்தது ?


உன் ஒளி குடித்துப் பழகிய நிலவு நான்

வேறு ஆயிரம் நட்சத்திரங்களின் வருகையும்

என்னை நிரப்புவதில்லை

பல ஒளி ஆண்டுக் கடந்த பின்னும்

உனது வெளிச்சம் என் நெஞ்சில் குறையவுமில்லை


வானில் எங்கும் உன்னைத் தேடியபடிக் கரைகிறேன்

இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடலாம்

வெளிச்சத்தில் தொலைத்ததை எதில் தேட?


Friday, January 10, 2025

பனிபடரும் நினைவு


பறவை இறந்த பின்பும்
அது உதிர்த்த ஓர் இறகு பறந்து கொண்டிருக்கிறது

பறக்கும் பட்டாம் பூச்சியின் நிழல்
தரையில் நடைப் பழகுகிறது

பனிக்காட்டில் எரியும் நெருப்பு
குளிரில் நடுங்கியபடி ஆடுகிறது

நின்றுக் களைத்த மரங்கள்
நிழலாக நிலத்தில் உறங்கி ஓய்வெடுக்கிறது

வான் தவழும் நிலவு
நீர் கண்டு நீச்சல் பழகுகிறது

இப்படித்தான்,
அன்பின் நினைவுகள் 
அனைத்தையும் அனைவரையும்
எப்போதும் ஒருபடி மேல்
பதிந்து வைத்திருக்கும்

பனி படர்ந்த போதிலும்
நினைவில் அன்பின் பெரு வெளிச்சம்
ஒருபோதும் மங்குவதில்லை